1980-களில் நான் கொண்டாடிய தீபாவளி

0

சுற்றிலும் கிராமங்கள் சூழ்ந்த கிராமம் தான் எங்கள் கிராமம். வயல்காட்டு உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உழைப்பாளிகள் எம்மக்கள்.

பெரும்பாலான குடும்பங்களில் தீபாவளி சிறப்புப் பலகாரமே இட்லிதான்!இன்று நிலைமை சற்று மேம்பட்டிருக்கக் கூடும்.

ஆனால் அவர்களின் கொண்டாட்ட உணர்வுக்கும், “முறைப்படி” தீபாவளி கொண்டாடாத எங்களைப் போன்றோர் மீது அவர்கள் வைத்திருந்த பாசத்திற்கும் குறைவே கிடையாது.

எங்கள் ஊரில் இருந்த கிறிஸ்தவ இளைஞர்களுக்கு, அக்கம் பக்கத்துக் கிராமங்களில் ஏகப்பட்ட இந்து வாலிபர்கள் நண்பர்களாக இருந்தார்கள். தினக்கூலிகளான அவர்களில் பலர், எப்பாடுபட்டாவது காசு சேர்த்து, ஆலங்குடி சென்று தீபாவளி இனிப்புப் பலகாரங்களை கடைகளில் விலைக்கு வாங்கிவந்து எங்களிடம் கொடுக்கும்போது அவர்களின் முகங்களில் ஓடிய மகிழ்ச்சி வெள்ளத்தை மரணத்தால் கூட வற்றிப் போய்விடச் செய்திட முடியாது.

- Advertisement -

- Advertisement -

அன்புக்கும், நட்புக்கும், கொண்டாட்டத்துக்கும் அதுதான் இன்று வரை எனக்கு இலக்கணம்! மாரி மகன் கணேசன் தனது வீட்டில் செய்த ‘சுளியன்’ போன்ற பலகாரங்களைக் கொண்டுவந்து கொடுத்ததும், அதை ஜெபமாலை மகன் ஆரோக்கியசாமி உள்ளிட்ட மற்ற இனத்தவர்கள் மறுக்காமல் மனமகிழ்வோடு வாங்கி உண்டதும், கிராமங்களில் இன்னும் ஜாதிக்கொடுமை இருக்கிறது என்று வாதிடுபவர்களின் முகத்தில் பூசப்பட்ட கரி!

4 bismi svs

தீபாவளிக்கு முந்தைய இரவன்று எல்லாத் திசைகளிலிருந்தும் பட்டாசு சத்தம் கேட்கும். தீபாவளி கொண்டாடுபவர்கள் மட்டுமன்றி, நாங்களும் “தூக்கமே வராமல்” தூங்கிக்கொண்டிருப்போம். விடிந்தும் விடியாமலும் எல்லோரும் கடைத்தெருவில் ஒன்று கூடிவிடுவோம். தீபாவளியின் சிறப்பு அம்சமே, கடைத் தெருவில் நடக்கும் சைக்கிள் போட்டிதான். செல்லத்துரை, சங்கிலி, சிதம்பரம் என்று பல சைக்கிள் பந்தய வீரர்களை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. இதில் சிதம்பரம் எங்கள் ஊர்க்காரர் என்பதால், நாங்களெல்லாம் அவரின் வெற்றிக்காக வேலை செய்தோம். சைக்கிள் போட்டி பிற்காலத்தில் கபடிப் போட்டியாக மாறிவிட்டது. சைக்கிள் போட்டி முடிந்தவுடன், பானை உடைத்தல் போட்டி மிகப் பரபரப்பாக இருக்கும். எங்களது பெற்றோர்களுக்குத் தெரிந்த நபர்கள், என்னைப்போன்ற சின்னப் பையன்களுக்கு பலகாரம் மற்றும் வெடி வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவர்.

பெட்டிக்கடை வைத்திருந்த ராவுத்தரின் மகன் ஷாஜஹான் எங்களது நண்பன். தீபாவளியின் போது அவனது தந்தையின் கடை அருகிலேயே கட்டிலில் வெடி விற்பான். நாங்கள் எல்லாம் அவனிடம் தான் வெடி வாங்குவோம். கேப்பு வெடி, சீனி வெடி, ஓலை வெடி, ராக்கெட், அனுகுண்டு, சங்கு சக்கரம், மத்தாப்பு என்று பலவகை உண்டு. சீனி வெடியும், ஓலை வெடியும் எங்களது செல்லப் பிள்ளைகள். யாராவது ஒருவன் வெடி வாங்கினாலே, அவன் பின்னால் ஒரு கூட்டமே திரண்டுவிடும். அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் வெடிவெடிக்கும் போது, வெடி வாங்கியவனுக்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். எனக்கு எப்படியோ முப்பது காசு கிடைத்துவிட்டது. ஏக மகிழ்ச்சி. இன்று அமெரிக்க டாலர்கள் கொடுக்காத ஒரு மகிழ்ச்சியை, அன்று அந்த முப்பது காசுகள் எனக்குக் கொடுத்தன. அந்த மகிழ்ச்சியில் நான் என் தந்தையின் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஷாஜஹான் கடை நோக்கி சிட்டாகப் பறந்தேன். அவனது கடைக்கு முன்பாக இருந்த, சற்று மேடுபள்ளமான இடத்தில் சைக்கிளை நிறுத்துவிட்டு, டேய்… முப்பது காசு கொண்டு வந்திருக்கேன்… வெடி குடுடா என்று பட்டைச் சாராயம் குடித்தவனைப்போல் கத்திக்கொண்டு விரைகையில், டமாரென பெரும் சத்தம் கேட்டது. திருப்பிப் பார்த்தால், எனது சைக்கிள் கீழே விழுந்து அதன் கண்ணாடி, டைனமோ எல்லாம் உடைந்து கிடந்தன. அந்தத் தீபாவளி எனக்கு எப்படி முடிஞ்சிருக்கும்னு நான் இதுக்கு மேலே உங்ளுக்குச் சொல்லவேண்டியதில்லை… எதோ என் தந்தை என்னை உயிரோடு விட்டதே பெரிசு!

இன்று, திரும்பிப் பார்க்கிறேன்… தீபாவளி கொண்டாடாமலேயே என் நெஞ்சம் இனிக்கிறது. உங்கள் அனைவருக்கும், அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.

 

அகத்தியன், வாசிங்டன் டிசி

வாஷிங்டன் தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் அகத்தியன் ஜான் பெனடிக்ட் அவர்களின் “தீபாவளி” குறித்த பதிவு

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.