திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலே பிறந்த முதல் குழந்தை யார் தெரியுமா ?
திருச்சி ஆஸ்பத்திரியிலே முதல் குவா… குவா….
“அப்போ அது கோட்டை பெரியாஸ்பத்திரினு சொன்னால் தாங்க எல்லாருக்கும் தெரியும். அதனை 1951ல் ஜூன் மாதம் திறந்திருக்காங்க. ஆஸ்பத்திரி கட்டி ஆரம்பிச்ச புதுசு. 1951ல் அங்கே முதல் குழந்தையா நான் தான் பிறந்தேன்னு எங்கம்மா என்னிடம் பல நேரங்களில் சொல்லியிருக்காங்க. இப்போ எனக்கு வயசு எழுபத்தி மூணுங்க.” எனச் சொல்கிறார் சையத் அக்பர் பாஷா. திருச்சி மதுரை ரோட்டில் இயங்கி வரும் திருச்சி மிர்ரர் மார்ட் உரிமையாளர்.
சையத் அக்பர் பாஷாவின் அம்மா ஜெஹராபீ. அப்பா சையத் யூசுப். வரகனேரி பகுதியில் வசித்துள்ளனர். “எங்க வீட்டில் எனக்கு முன்னாடி பிறந்தது ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்போது அவுங்க இரண்டு பேருமே வரகனேரி வெங்காய மண்டி ஆஸ்பத்திரியில் பிறந்திருக்காங்க. அப்போ அந்த இரண்டு பிரசவத்திலும் எங்கம்மாவுக்கு சுகப் பிரசவம் தான் ஆகியிருக்கு. மூணாவது குழந்தையா நான் பிறக்கும் போது, எங்க அம்மாவை திருச்சி பெரியாஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. 04.03.1951 அன்று மதியம் ஆஸ்பத்திரி வந்து அட்மிசன் ஆகியிருக்காங்க. மொதல்ல இரண்டு குழந்தையும் சுகப் பிரசவம்ங்கவும், இப்பவும் அது போலவே ஆகிடும்னு நம்பி இருந்துருக்காங்க. ஆனால் அப்படி ஆகிடலை.

எங்கம்மாவுக்குக் கொஞ்சம் சீரியஸா ஆகி இருக்கு. அப்போ டாக்டர்ங்க எங்க அப்பாட்ட கேட்டு இருக்காங்க. “பெரிய உசுரு வேணுமா? சின்ன உசுரு வேணுமா?”னு. எங்கப்பா துடிச்சிப் போய்ட்டாராம். இப்போ இருக்குற மருத்துவ வசதி எல்லாம் அப்போ ஏது? ரெண்டு உசுரும் தாங்க முக்கியம்னு எங்கப்பா சொல்லி இருக்காரு. அதுக்கு அப்புறம் தான் எங்கம்மாவுக்கு சிசேரியன் ஆபரேசன் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. 05.03.1951 அன்று அதிகாலை 12.45 மணிக்கு, திருச்சி பெரியாஸ்பத்திரியின் முதல் குழந்தையா நான் பிறந்திருக்கேன்.”
“அன்னைக்கி ஆஸ்பத்திரியில அதைக் கொண்டாடி இருக்காங்க. பின்னாட்களில் என்னோட அம்மா என்ட்ட அதை எல்லாம் விபரமா சொன்னாங்க. அன்னைக்கி அந்த ஆஸ்பத்திரியில பிறந்த குழந்தையான என்னைய போட்டுக்க ஒரு தொட்டில் கூட இல்லாம இருந்துச்சாம். அப்புறமா வரகனேரி வெங்காய மண்டி ஆஸ்பத்திரிக்கி ஒரு ஆளை அனுப்பி, குழந்தைங்க தொட்டில் ஒன்னு எடுத்துட்டு வந்து, அந்தத் தொட்டில்ல தான் என்னையப் போட்டு இருக்காங்க.
என்னோட மூணு வயசுல எங்க அப்பா இறந்துட்டாரு. அதனால என்னோட பத்து வயசுல நான் வேலைக்குப் போய்ட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறமா சொந்தமா கண்ணாடி கடை வெச்சேன். இப்போ எனக்கு வயசு எழுபத்தி மூணு நடக்குது. அந்த இறைய ருளாலே இப்பவும் நான் நல்லா ஆக்டிவா இருக்கேன்.” எனச் சொல்லி சிரிக்கிறார், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு மருத்துவ மனையில் முதல் குழந்தையான சையத் அக்பர் பாஷா.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
மிக சிறப்பான சுவாரஸ்யமான பதிவு.
அண்ணன் தாவீதுராஜ் அவர்களுக்கு
வாழ்த்தும் வணக்கமும்.
தொடர்ச்சியாக இது போன்ற சுவாரஸ்யமான
பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
– ஆரூர் செ.கர்ணா,
திருவாரூர்.