வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஒன்றான, 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் பெயரிலே அமைந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக வலம் வருபவர் பழனியாண்டி.
தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர். தொகுதியில் எங்கு பராமரிப்பு பணிகள், தூர்வாறும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட சென்றாலும், வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. என்ற பெயரை பெற்றவர்.

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவிலிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அன்றாடம் வந்து செல்லும் நிலையில், தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கவும்; திருவரங்கம் அடிமனை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கான நிபுணர்குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடத்தில் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார்.
திருச்சியின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றான உய்யக்கொண்டான் கால்வாய் மூலம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன. இந்நிலையில், உய்யக்கொண்டான் கால்வாய் பள்ளமாகவும் பாசன வசதி பெறும் வாய்க்கால்களின் மதவுகள் மேடாகவும் இருப்பதால், கோப்பு, குழுமணி, மஞ்சங்கோப்பு, முள்ளிக்கரும்பூர், குமாரவயலூர், சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து உள்ளிட்ட கிராமங்கள் பாதிப்பிற்குள்ளாவதை சட்டசபை கேள்வி நேரத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே 2 சிறிய தடுப்பணைகள் கட்ட 3.20 கோடி நிதி ஒதுக்கீட்டை பெற்றுத் தந்திருக்கிறார்.
புங்கனூரில் இருந்து சாந்தபுரம், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, தில்லைநகர் வழியாக ஸ்ரீரங்கம் சென்றுவர புதிய வழித்தட புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்திருக்கிறார்.
சோமரசம்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட நபார்டு திட்டத்தின் கீழ் 1.17 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியதோடு, அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்ட அளவில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றால் ஒரு பவுன் தங்க நாணயம் அளிப்பதாக ஊக்கமூட்டினார்.
சோமரசம்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சோமரசம்பேட்டையில் இயங்கிவரும் சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெற்றுத் தந்திருக்கிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நகர பேருந்து நிலையம், கண்ணுடையான்பட்டி, அயிலாப்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர், சோமரசம்பேட்டை, வடக்கு சேர்பட்டியில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகளை கட்டிக் கொடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காகித தொழிற்சாலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை தனது தொகுதியில் நிறுவியிருக்கிறார். இவற்றையெல்லாம்விட, பல நேரங்களில், எம்.எல்.ஏ. என்பதையெல்லாம் மறந்து வார்டு கவுன்சிலராகவே மாறி, அதிலும் சில நேரங்களில் எதிர்க்கட்சிக்காரனாகவே மாறி தொகுதியில் தெருவிளக்கு எரியாத பிரச்சினை உள்ளிட்டு அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்காக அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி அவர் கவனத்திற்கு வந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய முனைப்போடு செயல்படுபவர் என்ற பெயரை இன்று வரையில் தக்கவைத்திருக்கிறார்.