சாலைப்போட சொன்னா சாக்கு சொல்லும் அரசு எந்திரம் ! தொடர்ந்து பறிபோகும் அப்பாவி உயிர்கள்.!
தர்மபுரி அருகே அலகட்டு எனும் மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் லிங்காய்த் இன மக்கள். சாலை போட சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சற்றும் செவிக் கொடுக்காத அரசு எந்திரத்தால், அடுத்தடுத்து பறிபோவது எங்களின் உயிர்தான் என்று கண்ணீர் வடிக்கின்றனர் அப்பகுதி மக்கள்!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அலகட்டு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ருத்ரப்பன் –சிவலிங்கி தம்பதியினர். இவர்களுக்கு 1 மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகள் கஸ்தூரி (14). எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, போதிய சாலை வசதி இல்லாததால், மேற்படிப்பு தொடரமுடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28.11.2024 ஆம் தேதி தங்களது வீட்டருகே கீரை பறித்துக்கொண்டிருந்த கஸ்தூரியை விக்ஷப்பாம்புக் கடித்துள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்புக்கொண்டும் சாலை வசதி இல்லாததால் வர மறுத்துவிட்டனர். பின்னர் கஸ்தூரியை தூளிக்கட்டிக் தூக்கி வந்தபோது, இடையிலேயே உயிர் பிரிந்தது. இதற்கு காரணம் போதிய சாலைவசதி அரசாங்கம் அமைத்துத்தராததுதான் என்று குற்றம்சாட்டுகின்றனர் அக்கிராம மக்கள்.
இதுகுறித்து பேசும் அலகட்டு கிராமத்தைச் சேர்ந்த பசுவராஜ், “நாங்கள் பல தலைமுறைகளாக இந்த மலையை நம்பி வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு இதைவிட்டா வேறு வாழ்வாதாரம் கிடையாது. இந்த மலையை நம்பி சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எங்களுக்கென்று போதிய சாலை வசதி, தண்ணீர் வசதி, வீடு வசதியோ இல்லை. இதை ஏற்படுத்தி கொடுக்கச் சொல்லி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துட்டோம். ஆனா அவர்கள் அனைவரும் வனத்துறை நிலத்திற்குள் சாலைவசதி ஏற்படுத்துவது கடினம். அதனால் எங்களை வேண்டுமானால் மலையை விட்டு இடம்பெயர்ந்து கீழே வரக்கூறுகின்றனர். இதைவிட்டுச் சென்றால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
போதிய சாலை வசதி ஏதும் இல்லாததால், அவசர மருத்துவ சிகிச்சைக்குக்கூட யாரையும் அழைத்துச் செல்லமுடிவதில்லை. மற்றொருபுரம் மேற்படிப்பு படிக்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் தருமபுரி டவுனுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் எங்கள் கிராமத்தில் பலர் பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலை இருந்து வருகிறது. 10 கி.மீ க்குள் பள்ளிகள் இருந்தாலும், அங்கு மாணவர்கள் தங்கி படிக்கின்ற அளவுக்கு விடுதி வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக எங்கள் கிராமத்தில் இருந்து வருகிறது.
நாங்கள் ஒரு அவசரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கூட இரவு நேரங்களில் 8 கி.மீ வனப்பகுதியை கடக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதுவரை உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியாமல் ஒரு கர்ப்பிணி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு உயிர் போகும்போதும் நாங்கள் அதிகாரிகளிடம் போய் மன்றாடி கேட்கிறோம். அந்த சமயத்திற்கு சாலை அமைத்துதரவது போன்று வந்து அளவீடு செய்வார்கள். அதன்பின் யாரும் இந்த பக்கம் வரமாட்டார்கள். இதுதான் இப்போது வரையும் நடந்து வருகிறது” என்றார்.

மேலும் சிறுமி கஸ்தூரியை இழந்து தவிக்கும் அவரது தாயார் சிவலிங்கியிடம் பேசியபோது, “எதோ எங்களோட சக்திக்கு என் மகளை காட்டு வேலைக்கு சென்று படிக்க வச்சோம். நல்லா படிப்பா, படிப்புமேல ஆசை இருந்தும், சாலை வசதி இல்லாததனால் தூரமாசென்று படிக்க அனுப்பவில்லை. நாங்கள் மத்த பிள்ளைகளுக்கு செஞ்சதுக்கூட கஸ்தூரிக்கு செஞ்சது கிடையாது. ஒரு திருவிழான்னா கூட ஒரு நல்ல ஆடை இருக்காது அவளுக்கு. ஆனா அதையெல்லாம் சகித்துக்கொண்டு, குடும்ப கஸ்டத்தை பார்த்து வாய் திறந்து ஆசைப்பட்டதை எதையும் கேட்டது இல்லை. இன்னைக்கு என் மகளை தொலைச்சிட்டு நிற்க காரணம், எங்களுக்கு சாலை வசதி இல்லாததுதான். அதுமட்டும் இருந்துச்சுன்னா இன்னைக்கு எங்க கஸ்தூரிய காப்பாத்திருக்கலாம்” என்று கண்ணீர் வடித்தார்.!
இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிக்ஷிடம் பேசியபோது, “இதுகுறித்த தகவலை எனக்கு அனுப்பிவையுங்கள்.. வேரெரு எதும் ஸ்கீமில் சாலைப்போட வழி உள்ளதா என்பதை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து பாலக்கோடு சரக வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “ஏற்கனவே நில அளவைக்காக மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் வந்தபோது, எந்தப்பக்கம் வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பதை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. அதனால் மத்திய அரசு சார்பாக வந்த அதிகாரி கேன்சல் செய்துவிட்டார். இல்லையென்றால் சாலை வசதி எப்போதே ஏற்படுத்தியிருக்கலாம். தற்போது மீண்டும் அளவீடு செய்து அனுப்பியுள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் பேசியபோது, “சாலைவசதி ஏற்படுத்திதர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அப்பகுதி மக்களுக்கு சாலைவசதி ஏற்படுத்திதரப்படும்” என்றார்.
வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், செயலாக மாற்றினால் தானே ஆட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் பெருமை! முதல்வரே..!
– ஜெ. ஜான் கென்னடி,
படங்கள்- சேலம் விஜய்.