சிற்றிதழாசிரியர் “சுந்தர சுகன் ” நினைவு நாள் பதிவு
தஞ்சையிலிருந்து வெளிவந்த ” சுந்தர சுகன்’ சிற்றிதழாசிரியர் சுகன். 29 ஆண்டுகள் தனி மனிதனாக நின்று தன் இறுதி மூச்சு வரை இதழை நடத்தியவர்.
சுகனின் பூதவுடல் இப்போது இல்லை . ஆனால் அந்த உடல் தன் உழைப்பின் வியர்வையால் உருவாக்கிய படைப்பாளிகள் நிறைய இருக்கிறோம் .
என் கவிதைகளுக்கு முதல் மேடை அமைத்துக் கொடுத்தவர் சுகன் . அவர் அறிமுகம் செய்த நண்பர்கள்தான் காக்கைச் சிறகினிலே இதழின் இணை ஆசிரியர் இரா எட்வின் மற்றும் இனிய உதயம் இதழின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்கள். இவர்களால்தான் என் படைப்புகள் இந்த இதழ்களில் வருகின்றன. மற்றும் மரபுக் கவிதையில் மாமணியாக திகழும் ஐயா வெற்றிப்பேரொளி ஆகியோர் நட்பு எனக்கு அமைந்தது.
ஐயா என்ற சொல்லுக்கு உயிர் உண்டு என்பதை அவரும் அவர் குடும்பத்தினரும் காட்டுவர் . தமிழ் முதுகலை படித்த நான் ஆங்கிலம் கலந்து வெட்கம் இன்றி பேசுவேன். அறிவியல் படித்த அவர் வாயில் தப்பிக் கூட ஆங்கிலம் வராது ,.கருத்தில் சமரசம் செய்ய மாட்டார்.
ஒருமுறை ஒரு நிர்வாண ஓவியம் அட்டையில் இடம் பெற்றதற்கு சுகன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதினார். அவருக்கு பதில் சொல்லும் முகத்தான் பாலியலின் புனிதம் பற்றி ஓவியர் சிராஜ் அவர்கள் மூலம் ஐந்து மாதம் தொடர் கட்டுரை எழுத வைத்தார் .

இன்னொரு முறை கவிஞர் விக்கிரமாதித்யன் மணிவிழாவுக்கு சென்று வந்தவர் “ “குடியும் புகையும் கொண்டாட்டமும்” என்று அந்த விழாக்கூத்தை கட்டுரையாக பதிவு செய்து விட்டார். அதில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா பற்றி ஒரு வார்த்தை எழுதி விட்டார் . அவர் மிக கோபமாகி உறவை முறித்துக் கொண்டார். “வார்த்தை” மாத இதழில் ஒரு கதையில் சுகனை மறை முகமாக குத்திக் காட்டி எழுதி விட்டார்…நான் அதன் ஜெராக்ஸ் நகலை சென்னையிலிருந்து அனுப்பிவைத்தேன் ஆனால் பழைய நட்பு கருதி இவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அநேகம் ஆசிரியர் குழு இல்லாமல் வந்த ஒரே இதழ் சுகன் மட்டுமே. .அவரே கணிப்பொறி செய்து ,பிழை திருத்தி , அவரே அச்சிட்டு , அஞ்சலில் சேர்த்து அந்த உழைப்பு அவர் உடல் மீது அக்கறை செலுத்த இயலாமல் போய்விட்டது . சுகனை நாங்கள் இழந்து விட்டோம்.
ஒரு சிற்றிதழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், நடத்த வேண்டும் என்பதற்கும் சுகன் ஓர் உதாரண ஆளுமை (இன்று அவர் நினைவு நாள்.)
— ஜெய் தேவன் – எழுத்தாளர்.