எங்களுக்கு எதுவுமே கிடையாதா ? சிறைக்காவலர்களின் குமுறல் !
எங்களுக்கு எதுவுமே கிடையாதா ? சிறைக் காவலர்களின் குமுறல் !
தமிழக காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணி உயர்வு தொடர்பான விதிமுறைகளில், மாற்றம் செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால். இதன்படி, இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேரும் காவலர்கள் பத்தாண்டு காலம் கடந்த நிலையில் முதல்நிலை காவலர்களாக பதவி உயர்வு பெற்றும் பின்னர் அதே நிலையில் ஐந்தாண்டுகளை கடந்த நிலையில் தலைமைக் காவலர்களாக பதவி உயர்த்தப்பட்டும் பின்னர் பத்தாண்டுகளின் முடிவில் சார்பு ஆய்வாளராக தகுதி நிலை உயர்த்தப்படும் என்பதாக (10+5+10) பழைய விதிமுறைகள் இருந்தன.
இதில், முதல்நிலைக் காவலர்களாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலே, தலைமைக் காவலர்களாக பதவி உயர்த்தப்படுவார்கள் என்பதாக (10+3+10) என்பதாக தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேரும் காவலர் ஒருவர் 26 வது ஆண்டில் சார்பு ஆய்வாளராக பணி உயர்த்தப்படும் என்றிருந்த நிலை, தற்போது 24 ஆம் ஆண்டிலேயே அப்பதவியை எட்டும் நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், டிஜிபியின் இந்த அறிவிப்பால் தங்களுக்கு எந்த வகையிலும் பயனில்லை என்பதாக புலம்புகிறார்கள் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்கள். காவலர்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில், மதிப்பெண் அடிப்படையில் முதல் முன்னுரிமை அடிப்படையில் சிறைத்துறை காவலர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். சிறைத்துறை பணியிடங்களுக்கு நிரப்பியதுபோக, அதற்கு குறைவான மதிப்பெண்களை பெற்றவர்கள் மற்ற காவல் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், முதல் மதிப்பெண்களை பெற்று சிறைத்துறை காவலர்களாக பணியில் சேரும் காவலர்களுக்கு மற்ற காவலர்களை போல, தங்களுக்கு எந்தவிதமான பதவி உயர்வுகளும் கிடைப்பதில்லை என்பதாக அதிருப்தி தெரிவிக்கிறார்கள். மாறாக, ஓய்வு பெற்றபிறகான காலி பணியிடங்களுக்கே பதவி உயர்வை சிறைத்துறை நிர்வாகம் வழங்கி வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு சமீபத்தில் அதிரடியாக அறிவிக்கப்பட்ட சரகம் விட்டு சரகம் இடமாறுதல் உத்தரவால் மனரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். கல்வியாண்டு தொடக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவால், குடும்பத்தை பிரிந்து பணியாற்றும் சூழலை எதிர்கொள்வதாகவும், சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வீடு கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதாகவும், குறைந்தபட்சம் பத்தாயிரத்துக்கு குறைவாக வாடகை வீடு கிடைப்பதில்லை என்பதாகவும் பல்வேறு இடர்பாடுகளை பட்டியலிடுகிறார்கள்.
தங்களது நியாயமான கோரிக்கைகளின் மீதும் அரசு கரிசணம் காட்ட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள், சிறைக்காவலர்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.