பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவுக, இரு நாடுகளின் கிரிக்கெட் மரபைப் பாதுகாத்திடுக!
கோப்பையின் பெயரை மாற்றுவது பன்மைத்துவப் பண்பாட்டுத் தன்மையை அழிக்கும் சதியே!
இன்றைய கிரிக்கெட் விளையாட்டு, கூட்டத்தை ஈர்க்கவும் வீரர்களை ஊக்கப்படுத்தவும் ‘”ஊக்குவிப்பு கலைக் குழுக்கள்” (சியர்லீடர்) தேவைப்படும் அளவுக்கு வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. சூதாட்டப் புகார்களும் செய்திகளாக வெளிவருகின்றன. ஒரு காலத்தில் “பண்பாளர்களின் விளையாட்டு” (ஜென்டில்மேன் கேம்) என்று அறியப்பட்ட கிரிக்கெட், தனது புகழைக் கிட்டத்தட்ட இழந்து வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கோப்பைப் பெயரை மாற்றியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பைக்காகவும், இந்தியாவில் அந்தோணி டி மெல்லோ கோப்பைக்காகவும் விளையாடப்பட்டு வந்தது.
2007 முதல், இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பயணங்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் விளையாடப்பட்டு வந்தன. இஃப்திகார் அலிகான் பட்டோடி மற்றும் அவரது மகன் மங்சூர் அலி கான் பட்டோடி ஆகியோரை கவுரவுக்கும் வகையில் இவ்வாறு பெயரிடப்பட்டிருந்தது.
அதேபோல, இந்தியாவில் இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப் பயணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவர் நினைவாக அந்தோணி டி மெல்லோ கோப்பைத் தொடர் என்று அழைக்கப்பட்டது.
பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து, பட்டோடி கோப்பையை விலக்கிவிட்டு, 2025 ஜூனில் தொடங்கியுள்ள டெஸ்ட் தொடருக்கான கோப்பையின் பெயரை “ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை” என்று மாற்றியுள்ளனர்.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை என்பது இசிபி, பிசிசிஐ இரண்டுக்கும் இடையேயான ஒரு கூட்டு முயற்சி. இனி இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அனைத்து எதிர்கால டெஸ்ட் தொடர்களும் இப்படியே குறிப்பிடப்படும்..

திரு. ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ, இசிபி அமைப்புகளுக்கு திரு.டெண்டுல்கர் விடுத்த வேண்டுகோள்களுக்குப் பிறகு, தொடரை வெல்லும் அணியின் தலைவருக்குக் கோப்பையுடன், “சிறந்த ஆட்டத்திற்கான பட்டோடி பதக்கம்” வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவமதித்ததற்கான ஒரு ஆறுதல் ஏற்பாடாகவே பதக்கம் குறித்த அறிவிப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.
கோப்பைக்குப் பெயர் சூட்டுவதென்பது தனி ஒருவருக்கான அல்லது குடும்பத்திற்கான கவுரவம் அல்ல. ஒரு மரபைக் கொண்டாடுகிற செயல் அது.
கிரிக்கெட் சார்ந்த அரசுறவு (Cricket Diplomacy) என்பது, அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவாத கடினமான காலங்களிலும்கூட, பாராட்டத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது.
பட்டோடி கோப்பை உண்மையான இந்தியாவை, பன்முகப் பண்பாட்டு இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளிலும் போற்றப்படும் கிரிக்கெட் மரபையும், அரசுறவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மூத்த பட்டோடி இந்தியாவுக்காகவும், இங்கிலாந்துக்காகவும் விளையாடியவர். இளைய பட்டோடி இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.

இஃப்திகார் அலி கான் பட்டோடி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியவை வெறும் பெயர்கள் மட்டுமல்ல. இவ்விரண்டு பெயர்களும் இந்தியா எனப்படுவதன் கருத்தியலை விளக்குகின்றன. இந்தியா வெறுமனே ஒரு புவியியல் பகுதியல்ல. பன்மைத்துவ சமூகத்தில்தான் தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும் என்பதற்கு ஒரு சான்றாக நிற்பது இந்தியா.
பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் இந்தியா தனித்துவமானது.
பட்டோடி கோப்பையை ஏற்படுத்தியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான், இப்போது அதே வாரியம் தொடருக்கு “ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை” என பெயர் மாற்றம் செய்திருக்கிறது, இதில் மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்ற வாதத்தை ஏற்கவியலாது.
ஒரு விளையாட்டுக்கான கோப்பைக்குப் பெயர் சூட்டுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கோப்பைக்குக் குறிப்பிட்ட பெயர் ஏன் சூட்டப்படுகிறது என்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.
பட்டோடி கோப்பை என்ற பெயருக்கு ஒரு காரணம் இருந்தது. மூத்தவர் இரு நாடுகளுக்கும் விளையாடியவர், இளையவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இருவரும் முன்மாதிரியான கிரிக்கெட் வீரர்கள்.
பட்டோடி கோப்பையை நீக்குவதற்கு என்ன காரணம்? எந்தக் காரணமும் சொல்லாமல், மிகச் சாதாரணமாக, இசிபி நிர்வாகம் பட்டோடி குடும்பத்தைத் தொடர்புகொண்டு, போட்டித் தொடருக்கு மறுபெயரிடும் முடிவைத் தெரிவிக்கிறது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இசிபிக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் இசிபி நேர்மறையான பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பையின் பெயர் மாற்றம் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவரான ஜெய் ஷாவிடமிருந்து பொதுமக்களுக்கான எந்த அறிக்கையும் வரவில்லை. ஐசிசி தலைவராக அவர், எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் மறுபெயரிட வேண்டிய அவசியம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

சாதனை வீரர்களை கௌரவிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமேயன்றி வரலாற்றை அழிக்கக் கூடாது. மறுபெயரிடுவது என்பது வரலாற்றை அழிக்கிற வேலைதான்.
எதிர்ப்புக்குப் பிறகு ஒரு பதக்கத்தை அறிமுகப்படுத்துவது வெறும் ஆறுதல் நடவடிக்கைதானேயன்றி பொருத்தமான புகழ்மாலையல்ல.
ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையே எவ்வளவு காலம் நீடிக்கும், எதிர்காலத்தில் இந்தக் கோப்பையும் விலக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி நடந்தால், அது ஒரு அவமானமாகாதா? புதிய வீரர்கள் உருவாகும்போது பழைய பெயர்கள் மறைந்துவிட வேண்டுமா?
ஐசிசி இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோப்பையின் பெயரை மாற்றும் நடவடிக்கையைக் கைவிடுமாறு இசிபி–க்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஐசிசி இந்த விவகாரத்தில் மௌனம் காத்தது ஏன் என்பதற்கு விளக்கம் தேவை.
ஐசிசி தலைவரான திரு. ஜெய் ஷா இந்திய மக்களுக்கும் கிரிக்கெட்டை நேசிக்கும் சமூகத்திற்கும் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
இஃப்திகார் அலி கான் பட்டோடியும், மன்சூர் அலி கான் பட்டோடியும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிப்பவர்கள். இசிபி அந்த உணர்வைக் கொன்றுவிடக்கூடாது.
கிரிக்கெட் வீரர்களும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் இந்தக் கோப்பையின் பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெறும்படி இசிபி–யை வலியுறுத்த வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர், ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களின் பங்களிப்பு வேறொரு பொருத்தமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். கோப்பையின் பெயரை மாற்றுவது அவர்களின் பங்களிப்புக்கு நீதி செய்யவில்லை. இந்த விளையாட்டிற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேறு வழியே இல்லை என்பது போல இந்த நடவடிக்கை இருக்கிறது.

பல்வேறு பண்பாடுகள் கொண்ட ஒரு தேசத்தில் அனைவரும் ஒன்றெனும் உணர்வு எப்படி அடையப்பட்டது என்பதை நமது குழந்தைகள் அறிய வேண்டும். பன்முகத் தன்மையை அங்கீகரிப்பது ஒற்றுமையைப் பாதுகாப்பதாகும். பட்டோடி கோப்பையைத் தக்கவைப்பது இந்தியப் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதாகும்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN), கோப்பையின் பெயர் மாற்றத்தை இந்தியாவின் பன்முகப் பண்பாட்டுத் தன்மையை அழிக்கும் ஒரு சதித் திட்டத்தின் பகுதியாகவே கருதுகிறது.
பட்டோடி கோப்பையை மீண்டும் நிறுவி, இரு நாடுகளின் கிரிக்கெட் மரபையும் பாதுகாத்திடுமாறு இசிபி, பிசிசிஐ இரு நிர்வாகங்களுக்கும் பொதுச் செயலாளர், பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுக்கிறது.