எங்களுக்கு எதிரா சாட்சியா சொல்லப்போற … ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட கொடூரம் !
அண்ணன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த தம்பியை, அண்ணனை கொலை செய்த குற்றவாளிகள் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் விருதுநகரை அதிரவைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் குடும்பத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு, இரு குடும்பங்களுக்கிடையே மோதலை உருவாக்கியது.

இதில் வெள்ளைச்சாமியின் மனைவி முனீசுவரி தாக்கப்பட்டதாகக் கூறி, சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோகுல்குமார் மற்றும் அவரது அண்ணன் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த முன்விரோதத்தின் விளைவாக, அதே ஆண்டில் வெள்ளைச்சாமியின் மகன் ஈசுவரபாண்டியன், கோகுல்குமார் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் வெள்ளைச்சாமி மற்றும் முனீசுவரி சாட்சியம் அளித்த நிலையில், ஈசுவரபாண்டியனின் தம்பி கணேஷ்பாண்டியன் அடுத்த விசாரணையில் சாட்சியம் அளிக்க இருந்தார். ஆனால், கோகுல்குமார் தரப்பு, வெள்ளைச்சாமி குடும்பத்திற்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ்பாண்டியன் தேனியில் இருந்து இரவு 9 மணியளவில் சிவகாசி திரும்பி, வீட்டருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். கணேஷ்பாண்டியனைக் காப்பாற்ற முயன்ற அவரது தாய் முனீசுவரிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடினர். பலத்த காயங்களுடன் கணேஷ்பாண்டியன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முனீசுவரியின் புகாரின் பேரில், சிவகாசி டவுன் காவல்துறையினர் கொலையாளிகள் கோகுல்குமார், கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகிய நான்கு பேரைத் தேடி, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் கைது செய்தனர். கணேஷ்பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
— மாரீஸ்வரன்