மூளைக்குள் சிக்கலான அறுவை சிகிச்சை – 7 வயது சிறுவனை காப்பாற்றி அசத்திய அரசு மருத்துவர்கள்
அரிய நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே செம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் – ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் பாலபிரசாத் (7). கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயசிங் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையில், மூளைக்கும், மூக்கின் எலும்புப் பகுதியில் துவாரம் (CSF Rhinorrhea) இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே சிறுவனுக்கு தொடர்ந்து மூளைக்காய்ச்சல் ஏற்படக் காரணமானது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அடைத்தனர். தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 முதல் 20 இலட்சம் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரியில் இலவசமாகச் செய்யப்பட்டு, தற்போது சிறுவன் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

இந்த அரிய நோயை வெற்றிகரமாக சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. மேலும், புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக முதல்வர் ஜெயசிங் தெரிவித்துள்ளார்.
மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.