தன்னம்பிக்கையால் வென்ற தையல் தொழிலாளியின் மகள் !
தன்னம்பிக்கை பதிவு..
சத்யா சார் புதிய தலைமுறையின் நிறுவனத் தலைவர் ஆரம்பத்தில் இந்நிறுவனத்தில் சேர்கையில் எளிய ஊர்க்கார பெண்ணான எனக்கு திரையில் மிளிர வாய்ப்பளித்தவர்.
ஒரு நிகழ்ச்சியில் ஊரே அவர் பின்னால் சென்று கொண்டிருந்த போது, ஓரமாய் நின்றிருந்தாய் என் அன்னையைப் பார்த்து ” உங்க பொண்ணு கொஞ்ச நாள்லயே ஸ்டார் ஆயிட்டா” என்று கூறியவர் (இன்று வரையில் என் அம்மா அதை சொல்லி சிலிர்ப்பார்) , இதனால் வரையில் ஒரு முறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை. ஆனால் திருத்த வேண்டியவற்றை சரியாக திருத்திக் கொண்டே இருப்பார். அவருடைய பதவிக்கும் பழகுவதற்கும் சம்பந்தமே இருக்காது அவ்வளவு எளிமையானவர். அப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்று அவரை சந்தித்து அரை மணி நேரம் தனித்து உரையாடியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு… என்றென்றும் நிழலாடும். நன்றி சார்
சரி என் கதை. (டெய்லர் பொண்ணு)
ஜெகதீசன் எனும் தையல் தொழிலாளியின் மகள்… அனைத்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சிறு வயதில் குடும்ப சூழலால் கற்க முடியாதவள்… உயர் படிப்பு படிக்க போதுமான வசதி இல்லாமையால் சிரமப்பட்டவள், தனி ஒரு ஆளாய் சென்னைக்கு வந்து நிறுவனங்களின் படியேறியவள், எந்தப் பின்னணியும் இல்லாதவள், முழு புரிதல் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு செய்தி துறையில் கால் பதித்தவள், பலவித பழிச்சொற்களுக்கும் ஆளானவள், சிலரால் ஏளனமாய் எடுத்துக்கொள்ளப்பட்டவள், சிலரால் நேரடியாகவே வார்த்தைகளால் வசைபாட கேட்டவள்..
ஆனால் எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கையை கைவிடாதவள்…..
இன்று தமிழில் சிறந்த உச்சரிப்பாளர் விருதைப் பெற்றிருப்பவள் அவளே
ஆம் நண்பர்களே…
இந்த உலகம் சில நேரங்களில் நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பல நேரங்களில் கீழே போட்டு நொறுக்கும். அந்த வலியை கடப்பது கடினம் தான். ஆனால் அதனை தாண்டி விட்டாள் மிகப்பெரிய வெற்றி உங்களின் வாயிற்படியில் காத்திருக்கும். அப்படித்தான் எனக்கும். இத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கான பேரின்பம் இவ்விருது.
இவ்விருது இந்த உழைப்பு போதாது. இன்னும் அதிகம் வேண்டும் என்பதற்கான உந்துதலும் கூட…
இந்நேரத்தில் எனக்காக வாய்ப்பளித்த, வளர வேண்டும் என்று நினைத்த, எப்போதும் ஊக்கமளித்த, மனங்களுக்கு என் அளவில்லா அன்பும் நன்றியும்.
- சிறுவயதிலிருந்தே தமிழில் பேச மிகவும் விருப்பம். இதனால் பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளும் வீட்டின் அலமாரியை அலங்கரித்திருக்கும். பொறியியல் படிக்கச் சென்றாலும் எனக்கு செய்தி துறை தான் என்று எழுதி வைத்ததைப்போல கிடைத்தது வாய்ப்பு.
- அப்போதிலிருந்து துறையின் மீதும் வேலையின் மீதும் அளவில்லா பற்று காதல் தமிழ் மீதினை போலவே..
- ஆனால் அதற்கான படிநிலை எளிதாக இருந்துவிடவில்லை. அத்தனை தடைகளையும் தாண்டி இன்று தைரியமாய் நிற்க காரணம் தன்னம்பிக்கை. என் போன்ற நிலை வந்தவர்கள் இத்துறையில் இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். ஆனால் துறையின் மீதும் தமிழின் மீதும் உள்ள பற்றும் எனது தன்னம்பிக்கையும் தான் இந்த நிலைக்கு காரணம். எவர் வசைபாட கேட்டேனோ அவரே வாழ்த்து சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்பது தான் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம். அது தன்னம்பிக்கையாலே சாத்தியம்.
- நண்பர்களே, வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் சரி, எவ்வளவு வசை பாடல்கள் இருந்தாலும் சரி, எவ்வளவு இகழ்ச்சிகள் இருந்தாலும் சரி, உங்கள் வேலையை அர்ப்பணிப்போடு முழு மனதோடு செய்யுங்கள்.
- அதற்கான பலன் உங்களுக்கு கிடைத்தே தீரும். யார் இல்லாவிட்டாலும் உங்கள் உழைப்பும், தன்னம்பிக்கையும் என்றுமே உங்களை கைவிடாது. கை தூக்கி விடும். அன்று உங்களை வேண்டாம் என்றோரின் கைகள் உங்களுக்காக தட்டிக் கொண்டிருக்கும்.
- இதை நான் வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லவில்லை. வாழ்ந்து விட்டு சொல்லி இருக்கிறேன். கற்கும் கல்வியும், வேலையில் அர்ப்பணிப்பும், என்றுமே நம்மை உயர்த்தும் உயர்த்த வைக்கும்.
- சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.
— வேதவள்ளி
Comments are closed, but trackbacks and pingbacks are open.