விஜயின் தற்குறி மற்றும் மதக்கலவர பேச்சு!
“ஊழல் குற்றச்சாட்டுல பதவி நீக்கிட்டு இன்னொருத்தர நியமிச்சு இரு நூறு நாளாகியும் அவருக்கு இலாகாவே தரலை! இந்த செயல், சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துறதுன்னு அந்த மக்களே சொல்றாங்க..” – புதுச்சேரியில் விஜய் பேசியதில் முக்கியமான இரு வாக்கியங்கள் இவை.
இதில் முதல் வாக்கியம் பிழை. அடுத்த வாக்கியம் கலவர நோக்கம் கொண்டது!
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, (நிர்ப்பந்த) ராஜினாமா செய்தவர் என்.ஆர். காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த – போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வகித்த – சந்திர பிரியங்காதா. இவரது ராஜினாமா ஏற்கப்பட்டது, 21 அக்டோபர் 2023 அன்று.

இவருக்கு பதிலாக அதே என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த திருமுருகன், அதே போக்குவரத்துத் துறையின் அமைச்சராக 14 மார்ச் 2024 அன்று பதவி ஏற்றார்.
“இலாகா இல்லாத அமைச்சர்” என்பது முற்றிலும் வேறு விசயம். அதற்கு வருவோம்.
புதுச்சேரி பா.ஜ.க.வில் மாநில அளவில் பதவி வகித்தவர் உமா சங்கர். இவர் மீது வழிப்பறி, பாலியல் தொழில், கொலை வழக்குகள், புதுவை மற்றும் தமிழ்நாட்டில் உண்டு. இவர், ஏப்ரல் 26, 2025 அன்று கொலை செய்யப்பட்டார்.
“இந்தக் கொலையில், அதே பாஜகவைச் சேர்ந்த – ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை அமைச்சர் – சாய் சரவணகுமாருக்கு தொடர்பு” என்று தகவல் பரவியது.

இதை மறுத்து, அமைச்சர் சாய் சரவணகுமார் அறிக்கை/ வீடியோக்கள் எல்லாம் விடுத்தார். ஆனால் 27 ஜூன் 2025 அன்று பதவியை ராஜினாமா செய்யவைக்கப்பட்டார். அதாவது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இல்லை… கொலை விவகார சர்ச்சை காரணமாக!
இவரது இடத்துக்கு அதே பாஜகவைச் சேர்ந்த ஜான் குமாரை பரிந்துரை செய்தது பாஜக. அவரும் 12 ஜூலை 2025 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இவருக்குத்தான் இதுவரை அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இன்னும் புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை துறை, அமைச்சர் இல்லாமல்தான் கிடக்கிறது.
அதாவது ஜான்குமார் கடந்த 150 நாட்களாக(த்தான்!) இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். விஜய் சொல்வது போல இருநூறு நாட்களைக் கடந்து அல்ல. தவிர, ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலக்கப்பட்ட அமைச்சர் விவகாரம் வேறு.. இலாகா இல்லாத அமைச்சர் விவகாரம் வேறு.
கட்சி, அமைச்சரவை, காலம், நபர்கள், காரணம் எல்லாமே வேறு வேறு.
விஜய் வழக்கம்போல், குழம்பி இருக்கிறார்.
அவர் பேசிய இரண்டாவது வாக்கியம்.. கலவரத்துக்கு வித்திடும் முயற்சி.
“(இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பதிருக்கும்) இந்தச் செயல், சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துறதுன்னு அந்த மக்களே சொல்றாங்க..” என்கிறார்.

அதாவது, “ஜான்குமார் என்கிற கிறிஸ்துவருக்கு இலாகா இல்லாமல் ஒன்றிய பாஜக வைத்து இருக்கிறது. இதை கிறித்துவ மக்கள் அவமானமாக கருதுகின்றனர்” என்கிற அர்த்தம் தொணிக்கும்படி பேசி இருக்கிறார் விஜய்.
அப்படி எந்த சிறுபான்மையினர் அமைப்போ, தனிப்பட்ட நபர்களோ சொல்லவில்லை.
அமைச்சரவையில் இலாகா ஒதுக்க வேண்டியது ரங்கசாமிதான். ஒன்றிய பாஜக அரசு அல்ல.
“முதலமைச்சர் ரங்கசாமிதான் மனசு வைக்கணும்” என சம்பந்தப்பட்ட ஜான்குமாரே சொல்லி இருக்கிறார்.
“ஜான்குமார், லாட்டரி அதிபர் மார்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்டினுடன் நெருக்கமாக பழகுகிறார். ‘ஜோஸ் சார்லஸ் மார்டின் (ஜே.சி.எஸ்.) மன்றம்’ நடத்தும் நிகழ்ச்சிகளில் முன் நிற்கிறார். ஆகவேதான், முதலமைச்சர் ரங்கசாமி, ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்கவில்லை” என்று பேசப்படுகிறது.

ஆக… விஜய்க்கு இரண்டு நோக்கங்கள். தனது கட்சியின் புரவலர் ஆதவ் அர்ஜூனாவின் மச்சானுக்கு நெருக்கமான ஜான்குமார், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் வருத்தம்.
இரண்டாவது.. இல்லாத மதப்பிரச்சினையை உருவாக்குவது..
“பாஜகவின் பி.டீம்தானே விஜய்.. அவரே பாஜகவுக்கு எதிராக மத – மன நிலையை உருவாக்குவாரா?” என்ற கேள்வி எழும்.
விடை, எளிதானது.
“விஜய் சொல்வது சரிதான்… கிறிஸ்தவர் என்பதால் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை” என்று பிரச்சினை கிளம்புகிறது என வைத்துக்கொள்வோம்.
அதை பாஜக எளிதாக டீல் செய்துவிடும். “மதம் பார்த்தால் ஜான்குமாரை ஏன் அமைச்சர் பதவிக்கு பரிந்திருக்கிறோம்? இது முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவு. நாங்கள் எப்போதுமே மதம் பார்ப்பதில்லை. பொய்யாக முத்திரை குத்துகிறார்கள். இப்படித்தான் தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றத்திலும் எங்கள் மீது, ‘சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள்’ என முத்திரை குத்துகிறார்கள்” என்று தங்களுக்கு சாதகமான கருத்தை லாஜிக்காக வைப்பார்கள், பாஜகவினர்.
ஆக, புதுச்சேரியில், “சிறுபான்மையினருக்கு அவமானம்” என இல்லாத பிரச்சினையை கிளறும் விஜய், உண்மையிலேயே சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை.
இரண்டையும் முடிச்சிட்டுப் பாருங்கள்.
நான் சொன்னது போல… முதல் வாக்கியம் விஜயின் தற்குறித்தனத்தைக் காட்டுகிறது.. இரண்டாவது வாக்கியம் மதப் பிரச்சினையை உருவாக்கும் ஆபத்தான மனநிலையை வெளிப்படுத்துகிறது.
விஜயிடம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
— டி.வி.சோமு








Comments are closed, but trackbacks and pingbacks are open.