திருச்சி ”டைரி சகா” எனும் சகாப்தம் !
சகா எனும் சகாப்தம் !
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, நம்ம திருச்சியில் சக தோழனுக்காக நெகிழ்வான விழா ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.

வானொலி நாயகன் என்ற அடைமொழியாய் மட்டுமல்ல; திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாகிப் போனவர் நண்பர் சகா. Hello FM 106.4 இல் திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஒலிபரப்பாகும் ”டைரி வித் சகா” நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருபவர்.
ரம்மியமான இரவுப்பொழுதில், பண்பலையில் தனித்து ஒலிக்கும் அவரது காந்தக் குரலுக்கு மயங்காதவர் எவருமில்லை. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதில் புதைந்திருக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் பெரும்பாலும் டைரிகளில்தான் எப்போதும் புதைந்திருக்கும். டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அதுவும் இல்லை. ஆனால், அதுபோல எழுதாத பக்கங்களை, எவரிடமும் சொல்லாத உணர்வுகளை உணர்ச்சிகளை ”டைரி வித் சகா” பேசியிருக்கிறது.

அடுத்தவர்களுக்கு அவசியமில்லாத, அந்தரங்கங்களை பேசும் பக்கங்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை. ஒவ்வொரு ஜீவ ராசியும் ஒவ்வொரு நாளும் கடந்து போன பக்கங்களை பற்றி பேசியிருக்கிறது. வாழ்க்கை அனுபவங்களை அதன் வழியே கடத்தியிருக்கிறது. சமூகம் சார்ந்த உரையாடலாக அது விரிந்திருக்கிறது. காலத்தால் அழியா பண்பலை காவியம் ”டைரி வித் சகா”.
அவரது பண்பலை பயணத்தில் 20 ஆண்டுகள் நிறைவு மற்றும், அவரின் 51-ஆவது பிறந்தநாள் விழாவாக, ஜனவரி-16 அன்று திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்ட விழாவை நடத்தியிருக்கிறார்கள், சகாவின் சகாக்கள்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இவ்விழாவில், திருச்சி மண் சார்ந்து பல்வேறு துறைகளில் தடம்பதித்து வரும் ஆளுமைகள் பலரும் சங்கமம் ஆகியிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சகா-பற்றியும் சகாவின் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமைகள் குறித்தும் தங்களது தனிப்பட்ட அனுபவங்களை நெகிழ்வோடு பகிர்ந்தார்கள்.
சகாவை ஓவியமாய் தீட்டியிருந்தார்கள், Design School மாணவர்கள். டைரி நிகழ்வின் வழியே, தன்னம்பிக்கை விதைத்ததோடு மட்டுமின்றி பலரது தற்கொலை எண்ணங்களிலிருந்தும் அவர்களை காப்பாற்றியிருக்கிறார் சகா என்றார்கள்.
பண்பலை, திருச்சி என்ற வரம்போடு அல்லாமல் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாற பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அனுபவ உரையின் வழியே சமூக உரையாடலை அவர் தொடர்ந்து வருவதை பதிவு செய்தார்கள்.

ஸ்வச் பாரத் இயக்கத்தின் திருச்சி மாவட்டத்திற்கான தூய்மை தூதுவராகவும்; TRY Foundation என்ற அமைப்பின் செயலாளராகவும் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருபவர். குறிப்பாக மியாவாக்கி முறையில் அடர்வன காடுகளை திருச்சி மாவட்டம் முழுக்க உருவாக்கியதில் இவரின் பங்கு அசாத்தியமானது என்றார்கள்.
இதுஒருபுறமிருக்க, அவர் ஒரு ஆவணப்பட இயக்குநரும்கூட. மலைக்கோட்டை மாநகர மக்களின் மனக்கோட்டையில் நீங்கா இடம் பிடித்து நிலைத்திருக்கும் சாரதாஸ் என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஐயா தே.மணவாளன் அவர்களின் சரித்திர சாதனை பயணத்தை “சிகரம் தொட்ட பக்கங்கள்” என்ற ஆவணப்படத்தின் வழியே பதிவு செய்தவர் சகா. இதற்காக, இந்தியாவெங்கும் அவர் பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்டிருக்கிறார். அலைந்து திரிந்து அவ்வளவு மெனக்கெட்டு அந்த ஆவணப்படத்தை அவர் உருவாக்கியிருந்தார். சகா என்றுமே ஒரு சகாப்தம் தான் என்பதை அவரது பணிகளே பறைசாற்றும்.

’என்னோட குரலுக்கும் உங்களோட செவிகளுக்கும் இருக்கமான பந்தம் இருக்குனு நம்புறேன்” என்று பண்பலையில் வசீகரிக்கும் அதே காந்த குரலில், அவர் நிகழ்த்திய ஏற்புரை பங்கேற்பாளர்களை நெகிழ்வில் ஆழ்த்தி கசிந்துருக செய்தது.
எழுதி தீராத பக்கங்களாய் … உமது களப்பணிகள் யாவும் என்றும் சகாப்தமாக நிலைத்திருக்கட்டும் ! வாழ்த்துகள் சகா !
-ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.