கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசாங்க பிரதிநிதிகளாக இருப்போம் ! – ராஜேந்திர பாலாஜி
குடியரசு தின 77வது விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் நகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு, கட்சித் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவுடன் இணைய பல்வேறு அமைப்புகள், குறிப்பாக சமுதாய அமைப்புகள் காத்திருக்கின்றன. இன்று அனைவரும் ஒரே முடிவோடு இருக்கிறார்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்பி, அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே மக்களின் ஒரே நோக்கமாக உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “அண்ணா திமுக – பாஜக கூட்டணி 210 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். முன்பு எதிரும் புதிருமாக இருந்தவர்கள் அனைவரும் இன்று ஒன்றிணைந்துள்ளதால், எதிரணிகள் பேசத் திணறி வருகின்றனர்” எனக் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தைப் பற்றி பேசிய அவர், “மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சித் தலைமை எடப்பாடி பழனிசாமி அவர்கள் கைகாட்டும் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்தாண்டை குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, “அடுத்தாண்டு நம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசாங்க பிரதிநிதிகளாக இருப்போம். இன்று எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் ஜொலிக்க வேண்டும். இரட்டை இலைக்கான ஆதரவு தமிழ்நாடு முழுவதும் உள்ளது; விருதுநகர் மாவட்டத்தில் அது இன்னும் அதிகமாக வேண்டும்” என கட்சி நிர்வாகிகளிடம் உறுதியுடன் கேட்டுக் கொண்டார்.
“வளமான இந்தியா – அதிமுக ஆட்சி வந்தவுடன் வளரும் தமிழ்நாடு”
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.