கல்லூரி மாணவி மரணம் ! மாணவர்களை கைது செய்த காவல்துறை !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தாக்கி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் – முருகேஸ்வரி தம்பதியரின் மகள் சோலைராணி (19), ஶ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது நண்பருடன் புகைப்படம் எடுத்ததாகக் கூறி, கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் பியூன் மணிமாறன் ஆகியோர் மாணவியை கடுமையாக கண்டித்து, பொதுவிடத்தில் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பெற்றோரை அழைத்து வருமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி தாயுடன் கல்லூரிக்கு வந்த மாணவி, நிர்வாகத்தின் வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே நாளில் இரவு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகத்தின் அணுகுமுறையே காரணம் எனக் குற்றம்சாட்டி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் கல்லூரி முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், காலவரையின்றி கல்லூரி மூடப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக தாக்கி, பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.
இந்த கைதின்போது சில மாணவர்கள் கைபேசியை பிடுங்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக சுமார் 4 இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் கல்லூரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து மாணவர் அமைப்பினர் கூறுகையில்,
“உயிரிழந்த மாணவிக்காக நீதி கேட்டு போராடிய மாணவர்களையே காவல்துறையினர் தாக்கி கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது, காவல்துறை மாணவிகளின் பாதுகாப்பிற்காக அல்ல, தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது போல உள்ளது” என குற்றம்சாட்டினர்.
— மாரீஸ்வரன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.