ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி கோவிலில் ரூ.17.68 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்று திறந்து வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், சட்டமன்ற அறிவிப்பு 2022–2023 (அறிவிப்பு எண் 77) மற்றும் 2023–2024 (அறிவிப்பு எண் 152) படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் நேரடியாக கோவிலுக்கு வருகை தந்து ரிப்பன் வெட்டி பணிகளை தொடங்கி வைத்து, கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்காரக் கலை வேலைப்பாடுகள் செய்தல், மூன்று இடங்களில் நுழைவுத் தோரண வாயில்கள் அமைத்தல், வெளிப்பிரகார மண்டபத்தில் அலங்காரத் தூண்கள் மற்றும் சுவர் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் ஆனந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், தாசில்தார் ராஜாமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், நகர் மன்ற தலைவர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இப்பணிகள் நிறைவு பெற்றதன் மூலம் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.