காப்பீடு அட்டை வேண்டி கோரிக்கை ! அலட்சியப்படுத்திய அலுவலர்! போராட்டத்தில் காங்கிரஸ் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், படந்தாள் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள், தனது குழந்தைக்கு அவசர மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மருத்துவ காப்பீடு பெற குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க கோரி இணையதளம் மூலம் விண்ணப்பித்து கடந்த ஒரு வார காலமாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் (TSO) சிவானந்தத்திடம் தொடர்ந்து இதுகுறித்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மருத்துவ அவசர நிலை இருந்தும், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவியதாகவும், “நேரம் கிடைக்கும் போது விசாரணை முடிந்த பின் தான் செய்ய முடியும்” என கூறி குழந்தையின் உயிர் தொடர்பான சூழலை கூட கருத்தில் கொள்ளாமல் மனிதாபிமானமற்ற முறையில் TSO நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், சாத்தூர் வட்டாட்சியர் அவர்களிடம் நேரில் முறையிட்டபோது, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக தொடர்பு கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதன்பிறகும் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்ட வழங்கல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அறப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேச்சியம்மாளுடன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ், சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் மேற்கு வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்குப் பிறகு தாசில்தார் ராஜாமணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கும் பணிகள் செய்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வார காலமாக மருத்துவ அவசர தேவைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு, போராட்டம் நடந்த பிறகே தீர்வு கிடைத்தது மனிதாபிமானமற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடு எனவும், மக்கள் நல அரசின் பெயருக்கு மாறாக சில அதிகாரிகள் செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.