2026 தேர்தல் வாக்குறுதிகள்! தீவிர பிரசாரத்தில் அதிமுகவினர் !
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகள், சமூக சமநிலை மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வாக்குறுதிகள், சாத்தூர் நகரில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் மூலம் விளக்கப்பட்டன.
முக்கியமாக, மகளிர் நலனை முன்னிறுத்தும் ‘குல விளக்கு திட்டம்’ மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பதால், பெண்களின் பொருளாதார சுயநிலை மேலும் வலுப்பெறும் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து வசதிகளை எளிமையாக்கும் வகையில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தினசரி வேலைக்கு செல்வோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் என கூறப்பட்டது.
‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி இலவசமாக வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும், ஒரே குடும்பத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் மகன்கள் திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் செல்லும்போது அவர்களுக்கும் அரசே வீடு கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், பெண்களின் சுயதொழில் மற்றும் போக்குவரத்து வசதிக்காக ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’ மூலம் வாகனங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரசார நிகழ்ச்சியில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் ஆர்.கே.ரவிச்சந்திரன் நகரச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேருந்து நிலையங்கள், டீக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் என மக்களிடம் விளக்கினர்.
மக்கள்நலக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.