5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இதழியல் துறையில், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உள்ளிட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, பருவ இதழை தொடர்ந்து நடத்துவதென்பது நிச்சயம் சவால் நிறைந்ததுதான். அதுவும், வணிக ரீதியிலான பத்திரிகைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக மக்களுக்கான செய்தி என்ற தளத்திலிருந்து இயங்குவது செங்குத்தான பாதையில் பயணிப்பதற்கு நிகரானதுதான். ஆனாலும், வாசகர்களாகிய உங்களது ஊக்கமான பற்றுதல்தான், எமது பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.

எமது இதழியல் பயணத்தில் இறுதிவரை தாங்கள் உடன்வருவீர்கள் என்ற ஒற்றை நம்பிக்கையிலிருந்து, மாதமிருமுறை வெளியாகி வந்த அங்குசம் இதழை ஐந்தாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வார இதழாக கொண்டுவர தீர்மானித்திருக்கிறோம். ஆர்.என்.ஐ.-இல் அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டோம் என்பதை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
எத்தகைய சூழலில், எந்த நம்பிக்கையில் இந்த இடத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம் என்பது இங்கே முக்கியமானது. இணையவழி இணைப்பும் கைப்பேசி பயன்பாடும் கட்டற்ற நுகர்வு மோகத்தில் இளைஞர்களை வீழ்த்தியிருக்கிறது. வீட்டின் முற்றத்தில் மாத்திரமல்ல; அன்றாட நடைப்பயிற்சியில், கடைவீதியில், பல்வேறு காத்திருப்புகளில், பேருந்து பயணங்களில், பள்ளியறைகளில், அவ்வளவு ஏன் கழிவறைகளிலும்கூட கைப்பேசியின் பயன்பாட்டை தவிர்க்க முடியாத அளவுக்கு ஆறாம் விரலாய் அவனோடு – அவளோடு ஒட்டிக்கிடக்கிறது. இன்னும் மழலை சொல்கூட பேசிப்பழகாத பச்சிளங்குழந்தையிடத்திலும் நீங்கா இடம் பிடித்துவிட்டது இந்த கைப்பேசி. மெய்நிகர் உலகத்திலேயே அவர்களை ஆழ்த்திவிட்டது.
அன்று, ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும், மிக முக்கியமாக இரயில் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் விதம் விதமான வண்ணங்களில், அவரவர் விரும்பும் எண்ணங்களில் தினசரிகள் தொடங்கி பல்சுவை இதழ்கள் வரையில் சரம் சரமாய் தொங்கிக்கிடந்தன. இன்று, தமிழகத்தின் எந்த ஒரு இரயில் நிலையத்திலும், இதுபோன்ற புத்தகக்கடைகள் மருந்துக்குக்கூட இல்லை என்பதை உங்களில் எத்துனை பேர் கவனித்திருக்கிறீர்கள்? பேருந்து நிலையங்களில் எஞ்சியிருக்கும் புத்தகக் கடைகளும்கூட, குர்குரேவையும், பீடி, சிகரெட்டுகளையும் சேர்த்தே விற்கும் பெட்டிக்கடைகளாக மாறிவிட்ட அவலத்தை எப்படி புரிந்து கொள்வது?

நாற்பது வருடங்களாக புத்தகக்கடை நடத்தியவன் என்ற பெருமைக்குரியவர்களெல்லாம், பிழைப்புக்கு வழியற்ற ’அரதப்பழசு’ களாக முடங்கிக்கிடக்கிறார்கள்.
சிட்டுக்குருவிகளின் வாழ்விடத்தை செல்போன் கோபுரங்கள் அழித்துவிட்டதை ஆதாரப்பூர்வமாக விளக்கத் தெரிந்த நம்மால், புத்தகக்கடைகளின் இருப்பை கேள்விக்குறியாக்கிய விடயம் எதுவென்ற கேள்வியை கேட்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில் அச்சு ஊடகங்கள் தள்ளாடி கிடக்கின்றன. உண்மைச் செய்திகளை தருவதில் காட்ட வேண்டிய முனைப்பு, செய்திகளை முந்தித்தருவதில் வந்து நிற்கிறது. வாட்சப் வதந்திகளால் நிரம்பி வழிகிறது. சந்தேகங்கள் போக்கும் சான்றோர்களிடத்தில் கூகுள் இடம் பெற்றிருக்கிறது. உண்மைச் செய்தி எது, பொய்ச் செய்தி எது என்பதை பிரித்துணர்வதற்கு முன்பாகவே, அச்செய்தி பல்லாயிரக் கணக்கானோரை சென்றடைந்துவிடுகிறது. விசாலமான வாசிப்பை, ஒரு நொடி வாசிப்பில் நுணிப்புல் வாசிப்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
இந்தப் பின்புலத்தில்தான், அங்குசம் இதழ் வார இதழாக உங்கள் கைகளில் தவழப்போகிறது. பல்வேறு காத்திருப்புகளிலும் பேருந்து பயணங்களிலும் கைப்பேசிக்குப் பதிலாக, புத்தகங்களை அவர்களது கைகளில் இருப்பதாக கொஞ்சம் கற்பணை செய்துதான் பாருங்களேன். அந்த இடம்தான், அங்குசம் இதழின் இப்போதைய இலக்கு !

இதனை ஒரு வாசிப்பு இயக்கமாக முன்னெடுக்கும் நோக்கில், புதிய சந்தா சேர்ப்பியக்கத்தை அறிவிக்கிறோம். சலுகை விலையாக ரூ.500/-ஐ ஆண்டு சந்தா தொகையாக நிர்ணயித்திருக்கிறோம். வாசகர்களாகிய உங்களிடம் உரிமையோடு கோருகிறோம். இன்றே, இப்பொழுதே ஆண்டு சந்தா சேர்ப்பியக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்களது நண்பர்களையும், உறவினர்களையும், அரசியல் ஆர்வலர்களையும், சமூக நலன் விரும்பிகளையும் இந்த இயக்கத்தில் இணைத்து விடுங்கள்.
முக்கியமாக, உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் பொது நூலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளின் நூலகங்களுக்கும்கூட அங்குசம் இதழ் சென்று சேரும் வகையில், சலுகை விலையில் சந்தா செலுத்தும் வாய்ப்பை பயன்படுத்தி, அவர்களுக்காக நீங்கள் செலுத்தி பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த ஒரு பாலமாக, நீங்கள் திகழ நல்லதொரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வெறுமனே, சந்தாவோடு முடிவடைகிற விவகாரமும் அல்ல. வாசகர்களாக நீங்களும் அங்குசம் இதழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும். வழங்கவும் வேண்டும். அவை குறித்து தொடர்ந்து உரையாடுவோம்.
பூஞ்செடிகளை இன்று நட்டுவைப்போம், ஒருநாள் அது பூப்பூக்கும். தேனீக்களாய் வாசகர்கள் தேடி வருவார்கள். வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல; வாழ்நாள் சுவாசிப்பதற்கானது !
— அங்குசம் செய்திப்பிரிவு







Comments are closed, but trackbacks and pingbacks are open.