SAY NO TO ஏதாச்சும் நல்ல சேதி இருக்கா?
திருமணமான தம்பதியர் சில மாதங்களில் சமூகத்திடம் இருந்து எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வியாக இருப்பது “ஏதாச்சும் நல்ல சேதி இருக்கா?” இந்த கோட் வேர்டுகளுக்கு அர்த்தம் சொல்லவும் வேண்டுமா என்ன? பெரும்பாலும் 99.9% இந்த கேள்வி திருமணமான பெண்ணை நோக்கியே கேட்கப்படுவதால் சமூகம் தரும் இந்த அழுத்தத்தை பெண்களே அதிகம் நேரடியாகவும் மறைமுகமகாவும் அனுபவிக்கிறார்கள். கூடவே மணவாளனும் மணவாட்டி எடுத்துரைக்க ப்ரஷரை அனுபவிக்கிறார். நமது சமூகத்தில் நாம் கல்வியால் இயன்றவரை ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்துள்ளோம். சரி செய்து வருகிறோம். சிந்தனையில் பல மாற்றங்களை முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். ஆயினும் இந்தக் கேள்வியை மணமுடித்த தம்பதிகளிடம் கேட்பது அவர்களது சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது என்பதை அறியாமல் இருக்கிறோமா? அல்லது அறிந்தே தெரிந்தே அவர்களது தனிப்பட்ட முடிவுகளில் நமது முடிவுகளை திணிக்கிறோமா? யோசிக்க வேண்டும்…
ஒரு ஆண் ஒரு பெண் இல்வாழ்க்கையில் இணைந்து அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் உண்டாகி மனமொத்து அன்பு செய்து இயற்கையாக நடக்கும் நிகழ்வு “மகப்பேறு” தாங்கள் எப்போது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் ? என்ற முடிவை 18+ வயதைக் கடந்த மேஜரான தம்பதியர் முடிவுக்கே விட்டுவிடுவதில் நமக்கென்ன பிரச்சனை? சில தம்பதிகள் இப்போதைக்கு குழந்தை வேண்டாம். கொஞ்சம் இணக்கமாக வாழ்ந்து ஒரு வருடமோ இரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டா இல்லையா? இன்னும் சில தம்பதிகள் அவர்களுக்குள்ளாகவே இன்னமும் ஒரு புரிதலுக்கு வராமல் அவர்களின் இல்லற உறவே ஊசலாடிக்கொண்டிருக்கும் போது பிள்ளைப்பேறு குறித்து கொஞ்சம் லேட்டாக தான் சிந்திக்கட்டுமே? அதில் நமக்கு என்ன ப்ராப்ளம்? இன்னும் சிலர் உடலளவில் உடல் பருமன்/ பிசிஓடி/ விந்தணுக்கள் குறைபாடு உள்ளிட்ட சரிசெய்ய வேண்டிய சில பிரச்சனைகளுடன் இருக்கலாம் அதற்கான அவகாசத்தை மருத்துவ உதவியைப் பெற்று சரிசெய்து கொண்டு மகப்பேறுக்கு சென்றால் நன்மை என்பதால் அந்த நேரத்தை அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு தந்து விடுவதில் இருந்து எது நம்மைத் தடுக்கிறது ???

இக்காலத் தம்பதிகள் பெரும்பாலும் ஒரு டிகிரி இரண்டு டிகிரி முடித்தவர்கள் அவர்களுக்கு அவர்களின் இல்வாழ்க்கை குறித்து சிந்திக்கத் தெரியாது என்றும் அவர்களின் மகப்பேறு குறித்து அவர்கள் சிந்திக்கும் ஞானமற்றவர்கள் என்றும் நாம் எண்ணுவது சரியா? மீண்டும் விசயத்துக்கு வருவோம் திருமணமான இரண்டாவது மாதமே தலைக்கு குளிக்கக் கூடாது என்று எண்ணும் மாமியார்கள் இன்னும் வாழும் சமூகமாக நாம் இருக்கிறோம். அத்தகைய மாமியார்களின் கரங்களைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு கூர்ந்து புதிதாய் உங்கள் இல்லத்திற்குள் நுழைந்திருக்கும் உங்கள் மருமகளிடம் அத்தகையதோர் கேள்வியைக் கேட்டு விடாதீர்கள்.
இது அவர்களது மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கும் உங்களின் மருமகளுக்கும் இடையேயான உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தக்கூடும். மருத்துவராகிய எங்களிடம் புலம்பும் பதட்டப்படும் உறக்கம் இழந்து மருந்துகள் தேடும் பல இளம் சகோதரிகளைக் கண்டு வருவதால் கூறுகிறேன். நிச்சயம் பிள்ளைப்பேறு என்பது திருமணம் மூலம் கிடைக்கும் சிறந்த விசயம். எந்த திருமணமான பெண்ணும் அதை வேண்டாம் என்று மறுக்கப்போவதில்லை. ஆனால் அதற்குரிய நேரம் / அவகாசம் போன்றவற்றைக் கோரும் உரிமை அவளுக்குண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திருமணமாகி ஒன்றாக இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு வருடமாகியும் குழந்தைப்பேறு உண்டாகாமல் இருந்தால் மருத்துவ உதவியை தம்பதியர் நாடினால் போதுமானது. தம்பதியர் எனும் சொல்லில் மனைவியுடன் கணவனும் அடக்கம் என்பதால் இருவரும் ஒன்றாகச் சென்று மருத்துவ உதவியை நாட வேண்டும். தற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனை பெண் ஆண் இருவருக்கும் சரிசமமாக உள்ளது. ஆனால் சிகிச்சைக்கு பெண்கள் மட்டுமே வருகிறார்கள்.

இது சரியன்று, மகப்பேறுக்கு இருவருமே பொறுப்பு என்பதால் இருவரும் சேர்ந்தே சிகிச்சை பெறுவதே சிறந்தது. பெண்கள் விசயத்தில் உடற்பருமன் பிசிஓடி சீரற்ற ஒழுங்கற்ற மாதவிடாய் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற சரி செய்யக்கூடிய பிரச்சனைகளும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு , அவற்றின் பாகங்களில் பிரச்சனை ,விந்தணு நகர்தலில் , பிரச்சனை, உற்பத்தியில் பிரச்சனை, ஆணுறுப்பு விரைப்பில் பிரச்சனை என்று பல சரிசெய்யக்கூடிய பிரச்சனைகள் உள்ளன.
இவற்றை மகப்பேறு மருத்துவரிடம் காட்டி சரி செய்து கொள்ள முடியும். கூடவே உணவு முறை மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் இத்தகைய பிரச்சனைகள் சரியாக கால அவகாசத்தை வழங்கி பொறுமை காக்க வேண்டும். எனதருமை சமூகத்துக்கு
நான் கூற விளைவது ஒன்று தான் தயவு கூர்ந்து திருமணமான தம்பதியரிடம் குழந்தைப்பேறு குறித்த சமூக அழுத்தத்தைக் தராமல் சற்று விலகி நின்று அவர்கள் ஆனந்தமாக வாழ்வதை ரசிக்கலாம். அவர்கள் உதவியென்று அழைத்தால் ஓடிச்சென்று உதவலாம். இதுவே சிந்தனையில் முன்னேறிய சமுதாயத்தின் முக்கியமான குணமாகும்
Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.