8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பல் கிளினிக் ! சிறைவரை சென்று போராடிய ஸ்ரீராம்குமார் !
வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் 2023 ஆண்டில் சிகிச்சை பெற்ற 10 பேரில் தொற்றுக்குள்ளாகி அதில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து அதிகாரிகள் அந்த கிளினிக்கை இழுத்து மூடிய சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி தெருவில் அறிவரசன் என்பவர் VTS என்னும் பெயரில் பல் கிளினிக் நடத்தி வந்தார். அந்த கிளினிக்கில் வாணியம்பாடி நியூடவுன் சத்யா, இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் சத்யா, கோணாமேடு நர்மதா, பெருமாள்பேட்டை ஜெய்சீலி, பெரியபேட்டை ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் அனிதா, செங்கிலிகுப்பம் இளங்கோவன் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்று சென்றவர்கள் அடுத்த ஆறு மாதங்களில் மூளையில் நோய் தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.

அவர்களில், நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணியின் மகன் ஸ்ரீராம்குமார் VTS கிளினிக்கில் அறிவரசன் அளித்த தவறான சிகிச்சையால், தனது தாயார் உள்பட 8 பேர் உயிரிழந்து விட்டதாக 2023 ஏப்ரல் -16 இல் ,வாணியம்பாடி நகர காவல் நிலையம், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் , மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் , VTS பல் கிளினிக்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறி , காவல் துறையினர் ஸ்ரீராம் குமார் மீது இருமுறை வழக்குப்பதிவு செய்து 1 மாதம் வரை சிறையிலடைத்தனர்.

இதற்கிடையே, சர்ச்சைக்குள்ளான ” VTS கிளினிக்கை ” , மண்டி தாதேமியான் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு “அறிவு” பல் மருத்துவமனை என்ற பெயரில் பெயர்மாறி இயங்கி வந்தது. பின்னர் , சிறையில் இருந்து வந்த ஸ்ரீராம் குமார் முதல்வரின் தனி பிரிவுக்கு புகாராக அளித்திருந்தார் . அதனைத்தொடர்ந்து வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் , ஆகியவற்றைக்கொண்ட மருத்துவக் குழு விசாரணை நடத்திவிட்டு சென்றது.
இந்த நிலையில் , சமீபத்தில் “VTS dental clinic -ல் ‘ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 8 பேரும் ஒரே மாதிரி நோய் தொற்று காரணமாக உயிரிழந்ததாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவ மனையின் மருத்துவக் குழுவினர் அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கையில், “VTS மருத்துவமனையில் , சிகிச்சை பெற்று வந்த இந்திராணி, நர்மதா, சத்யா, வரதன், ஜெய்சீலி, இளங்கோவன், ஆபிசூர் ரகுமான், அனிதா உள்ளிட்ட 8 பேருக்கும் மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று நியூரோ மெலியோய்டோசிஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக “தி லான்செட்டில்’ ஆய்வில் தெரிய வந்தது என்றும்; மருத்துவமனைகளில் “பெரியோஸ்டீயல் லிஃப்ட்” எனப்படும் கருவியை, மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். அந்த கருவியை பயன்படுத்தியப்பிறகு , சுத்தமாக பாதுகாக்கப்பட்ட இடங்களில் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், VTS பல் மருத்துவ மனையில் “பெரியோஸ்டீயல் லிஃப்ட்” கருவி “அசுத்தமான’ இருந்த நிலையில் அதை சுத்தம் செய்யாமல் நோயாளிகளுக்கு அப்படியே சிகிச்சை அளித்தததின் விளைவாக” நோயாளியின் மூளைக்குள் பாக்டீரியாவானது சென்று “நியூரோ மெலி யோய்டோசிஸ்” எனப்படும் நோய் தொற்று ஏற்பட்டு , சிகிச்சை பெற்ற 8 பேருக்கும் மத்திய மற்றும் புற நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தலை வலி, காய்ச்சல், மூளையில் சீழ் பிடித்தல், மண்டையில் நரம்பு வாதம் , போன்ற அறிகுறிகளால் அவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது” என கூறப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 1 ந்தேதி ஆய்வு செய்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஞானமீனாட்சி அது தொடர்பான ஆய்வறிக்கையை மருத்துவத்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவர் அறிவரசனிடம் “VTS கிளினிக் பெயரை அறிவு பல் மருத்துவமனை ” என மாற்றியது ஏன்? எனவும் இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும், தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவ இணை இயக்குநர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று அறிவரசனின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பதால், அவரின் கிளினிக்கையை இழுத்து மூடி சீல் வைத்து , இது தொடர்பாக இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம், எனத் தெரிவித்துவிட்டு சென்றார்.

நடவடிக்கை குறித்து ஸ்ரீராம்குமார் கூறுகையில், ”பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 முறை சிறை சென்றேன். எங்கள் அம்மா மரணத்தோடு அந்த கிளினிக் மூடப்பட்டது. இது நிரந்தர தடையாக இருக்க வேண்டும். மற்ற ஏழு பேர் குடும்பத்தினர் போல, நானும் ஒதுங்கி இருந்தால் இன்னும் மரணங்கள் தொடர்ந்து இருக்கும். மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஞானமீனாட்சி, அம்மா மதுரை மீனாட்சியாக வந்தார் அந்த தெய்வத்திற்கு கோடானகோடி நன்றி. அறிவரசனால் கொல்லப்பட்ட 8 குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். அறிவரசன் டாக்டர் அன்பிட். அதனால், அவர் மருத்துவ பணியை செய்ய அனுமதிக்க கூடாது. 8 உயிர்கள் அவரால் பறிபோனதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், ஸ்ரீராம்குமார்.
— மணிகண்டன்.