பீகார் தேர்தல் : யாருக்கு வெற்றி..?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பீகார் இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு மாநிலம். அண்மைக்காலமாக செய்திகளில் மிகவும் பர பரப்பாக இருந்தது பீகார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பீகாரில் மற்ற இடங்களைப் போலவே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி – NDA

இக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.

பாஜக 101 தொகுதிகள்

ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகள்

லோக் ஜனசக்தி 29 தொகுதிகள்

இந்துஸ்தானி அவார் மோர்ச்சா 6 தொகுதிகள்

ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இக் கூட்டணியில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் இருக்கிறார். பட்டியலின மக்களின் தலைவராக அறியப்பட்ட ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் இருக்கிறார். தற்போதைய ஒன்றிய அமைச்சர் ஜித்தன் ராம் மன்ஜி தலைமையிலான கட்சியும் இடம் பெற்றுள்ளது. இது மிகவும் வலுவான கூட்டணியாக உள்ளது.

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்

தீவிர திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களும் எதிர்க் கட்சிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜக இத்தகைய மோசடியை செய்துள்ளது என்பது யாவரும் அறிந்ததே.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பீகாரின் மொத்த வாக்காளர்கள் 7.24 கோடி. இதில் பட்டியல் சாதியினர் 16 சதவீதம். இஸ்லாமியர் 17 சதவீதம். பழங்குடியினர் 1.28 சதவீதம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற போர்வையில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி போராடியதன் விளைவாக பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக 21 இலட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். 3.5 இலட்சம் பேர் நீக்கப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. முதன்மையான நிலையில் உள்ள முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இயங்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 138 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும் போட்டியிடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

அண்மைக்காலமாக பீகாரில் ராகுல் காந்தியின் பரப்புரைகள் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. 69 சதவீதம் மட்டுமே எழுத்தறிவு கொண்டதும் மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கியதுமான ஒரு மாநிலம் பீகார். இலட்சக் கணக்கானோர் பஞ்சம் பிழைக்கத் தமிழ்நாட்டுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். எனவே இந்த அவல நிலையைப் போக்குவதற்காகக் குரல் கொடுத்தார் ராகுல் காந்தி. இதன் விளைவாக ஆளும் கூட்டணிக்கெதிரான அலை வீசுகிறது.

கூட்டணி சரியாக அமைந்து தேர்தல் நியாயமாக நடந்தால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராவார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்றாம் நான்காம் சதிகள்

போட்டி என்பது முதல் இரண்டு கூட்டணிகளுக்கிடையேதான். எனினும் கூட்டணியில் வராத சில சிறு கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிக்கப்படும். இது தேர்தல் முடிவை பாதிக்கும். அந்த வகையில் இரண்டு கட்சிகள் பீகாரில் களம் காண்கின்றன. ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி நூறு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் ஒவைசியின் கட்சி பாஜக தலைமையிலானக் கூட்டணியின் வெற்றிக்கு மறைமுகமாகத் துணை நிற்கும். இதனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் இஸ்லாமியரான ஒவைசி பாஜகவின் “பிடீம்” என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ்  கட்சி தனித்து களம் காண்கிறது. இக் கட்சிக்கு 13 சதவீத வாக்கு வங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இக் கட்சி என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இப்போது உறுதியாகக் கூறமுடியாது.

யாருக்கு வெற்றி…?

கருத்துக் கணிப்பில் சிறந்த முதல்வர் யார் என்ற  கேள்விக்கு 40 சதவீத மக்கள் தேஜஸ்வி என்றே கூறியுள்ளனர். கருத்துக்கணிப்பில் இரண்டு கூட்டணிகளுமே சுமார் 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்றே கூறப்படுகிறது. எனவே இந்தியா கூட்டணி வெற்றி பெற்று தேஜஸ்வி முதல்வராவர் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதற்கு ராகுல்காந்திக்கு உள்ள ஆதரவும் ஒரு காரணமாகும்.

அதேவேளை தேர்தல் தில்லுமுல்லு மற்றும் ஒவைசியின் சதி என்பவை மட்டுமின்றி பிரசாந்த் கிஷோரின் கட்சியும் இந்தியா கூட்டணிக்கு எதிரானதாக இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பும் உள்ளது.

 

—    வழக்கறிஞர் தமிழகன், திருச்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.