ஆட்சியர் அலுவலக கேட் மூடல் ! முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர்!
மதுரையில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை முள்வேலி அமைத்து தீண்டாமை முறையை கடைபிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித்தமிழர் கட்சியினர் …
மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட் மூடப்பட்டதால் பரபரப்பு கடும் போக்குவரத்து நெரிசல்…
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வி. அம்மாபட்டி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஊரைச் சேர்ந்த குருசாமி தேவர் என்பவரிடமிருந்து நடைபாதைக்கென்று ஒரு செண்டு நிலத்தை விலைக்கு வாங்கி நடைபாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பாதையை அதே ஊரைச் சேர்ந்த சிலர் தற்போது முள்வேலி போட்டு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், அந்த வழியாக சென்றால் சாதிய ரீதியாக பேசி தீண்டாமை போக்கை கடைப்பிடிப்பதாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆதித்தமிழர் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வாசலிலே காத்திருந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்து சென்றனர்.
இது குறித்து பேசிய ஆதித்தமிழர் கட்சியினர் தங்கள் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை விலைக்கு வாங்கிய நிலையில் தற்போது சில நபர்கள் முள்வேலி போட்டு அடைத்து வைத்து தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்