300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ! சீதனப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கலந்து கொண்டு சீதனப் பொருட்களை வழங்கி பேசினார். கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வது தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், தினசரி ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளுதல், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், மனஅழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவை ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு அவசியம் என வலியுறுத்தினார். தாய்ப்பால் குழந்தையின் முதல் உரிமை என்றும், பிறந்தவுடன் முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு பெண்கள் நலனுக்காக கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தாய்–குழந்தை நலனை மேம்படுத்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான தாய்மை, சிசு மரண விகிதத்தைக் குறைப்பது, குழந்தைகளின் சரியான வளர்ச்சி படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், கோட்டாட்சியர் கனகராஜ், தாசில்தார் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.