கல்லூரி நிர்வாகத்தின் தொடர் அலட்சியம் ! மருத்துவமனையில் மாணவா்கள்! மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு!
கல்வி நிலையங்கள் வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பானதா என்று உறுதி செய்க!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய எக்ஸல் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கடந்த 27.10. 2025 அன்று இரவு உணவு அருந்திய மற்றும் 28.10.2025 அன்று உணவு அருந்திய சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த கல்லூரியில் பல லட்சம் கட்டணமாக செலுத்தி படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் , விடுதியில் வழங்கப்படும் உணவும் சுகாதார சீர்கேடு நிறைந்ததாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலிருந்து இதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறப்பட்டது. உணவுக்கூடங்களில் கரப்பான் பூச்சி அதிகம் காணப்பட்டது என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பெருமளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை கல்வி நிலையங்களிலும் உணவு கூடங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் உணவுக் கூடங்களை கையாள்வதற்கான தனி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து வெளியிட வேண்டும் என்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
தமிழ்நாடு மாநில குழு







Comments are closed, but trackbacks and pingbacks are open.