தனது சித்தாந்த எதிரிகளை பழிவாங்கும் மேடையா, நீதிமன்றம் ?
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வகுப்புவாத மற்றும் சாதி சார்பு கொண்டவர் என்று குற்றம் சாட்டியதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மீதான விமர்சனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர் சாமிநாதன் – ராஜசேகரன் அமர்வு வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அழைப்பானை அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கை கருத்துரிமைக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது மதவெறி, சாதிவெறி அமைப்புகளான ஆர்எஸ்எஸ் – இந்து முன்னணி – பாஜக சார்பு கொண்டவர் என்பது உலகம் அறிந்த உண்மை. சங்பரிவாரங்களில் சித்தாந்தத்தில் அவருக்கு இப்போதும் மாற்றுக் கருத்து இருப்பதாக தெரியவில்லை. அவர் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.

ஆனால், நீதிபதி என்பவர் வழக்கறிஞராக இருந்தபோது கொண்டிருந்த சித்தாந்தங்களை தன்னுடைய நீதித்துறை செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தினால் பொது சமூகம் அவர்களை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட முடியாதது என்பதை நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு சகிப்புத்தன்மையை வரவழைத்துக் கொள்வது தவிர நீதிபதி சாமிநாதனுக்கு வேறு வழியில்லை.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் முன் நிற்பவர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். திருப்பரங்குன்றத்தை முன்வைத்து மதுரை மண்ணை வகுப்புவாத கலவர பூமியாக மாற்றும் சங்பரிவாரங்களின் கனவை மதுரை மக்களின் ஒற்றுமை நடவடிக்கையின் மூலமாக கலைத்தவர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சிறை ஒடுக்கும் முறைகளை எதிர் கொண்டவர். மதுரையில் சங்பரிவாரங்கள் நிகழ்த்திய வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வழக்குகள் பதிவு செய்ய வைத்தவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் வேண்டும் என்கின்ற கோரிக்கைக்காக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துபவர்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் வாஞ்சிநாதனின் செயல்பாடுகள் காரணமாக சங்பரிவாரங்களுக்கு ஏற்பட்ட எரிச்சல் காரணமாகவே, சித்தாந்த நண்பரின் அழைப்பாணை வழியாக வெளிப்படுவதாகவே பொது சமூகம் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது நீதிபதி சாமிநாதன் ஒரு தலைபட்சமானவர் என்பதைத்தான் உறுதி செய்யும்.
நீதிபதி சாமிநாதன் மீதான விமர்சனங்களுக்கு அவரது கீழ்க்கண்ட சில நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இருந்தது என்பதை அவரே மறுக்க முடியாது.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தை எப்போதும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கும்பல்கள் மேடையாக, கடிவாளமாக பயன்படுத்தி வருகிறது.
பாஜகவின் சித்தாந்த எதிரிகள் ஆட்சி செய்கின்ற தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுக்கு எல்லா விதமான நெருக்கடிகளையும் கொடுக்கின்ற வேலைகளை நீதிபதி சாமிநாதன் அவர்களின் அமர்வின் மூலமாகவே பெரும்பாலும் சங்பரிவாரங்கள் சாதித்தார்கள் என்பது விமர்சனம்.
நீதிபதி சாமிநாதன் சங்பரிவாரங்களுக்கு தாராளமான பாதுகாப்பையும், எதிர் கருத்தாளர்களுக்கு கடுமையான எதிர்வினைகளையும் எப்போதும் வாரி வழங்கினார் என்பதும் பொது சமூகத்தின் விமர்சனம்.
சங்பரிவாரங்கள், சனாதன வாதிகள் தங்களுக்கு தோதான தீர்ப்புகளை பெறுவதற்காக எப்போதும் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அமர்வை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அறிவார்ந்தவர்களின் குற்றச்சாட்டு.
பாஜக ஆட்சியில் நீதிபதிகள் பலர் தாங்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்கள் என்பதை மறந்து விட்டு, மக்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை மறந்து விட்டு பாஜக – ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த அரிப்புகளை தீர்த்துக் கொள்ளும் இடமாக நீதிமன்றங்களை மாற்றி உள்ளனர்.
நீதிபதி சாமிநாதன் வெளிப்படையாக தான் ஒரு பிராமணர் என்பதை எப்போதும் வெளிப்படுத்தி வருபவர். அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் நிகழ்வு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற போது பங்கேற்ற ஜி.ஆர்.சாமிநாதன் தான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்ததாலேயே இட ஒதுக்கீட்டை தொடக்கத்தில் விரும்பவில்லை என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை காரணமாக இட ஒதுக்கீட்டை தற்போது ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் செய்த அளவுக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அவர் எதையும் செய்யவில்லை.
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநரின் தலையில் குட்டி தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமுன் வரைவுகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதற்கு உருவாக்கிய சட்டங்களுக்கு அவசர அவசரமாக தடை விதித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை தடை செய்துவிட்டார் என்று விமர்சனம் நீதிபதி சாமிநாதன் மீது உண்டு.

பாஜக தலைவர் அண்ணாமலையை தன்னுடைய வழக்கு விசாரணையின் போது புகழ்ந்து தள்ளி அவரது புகழைப் பரப்பியவரும் அன்னார்தான்.
வழக்கு விசாரணைகளின் போது சம்பந்தம் சம்பந்தமில்லாமல் கற்பனையான இதிகாசங்களை புகழ்ந்து பேசுவதும் அன்னார் தான்.
வழக்கு விசாரணையின் போது குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை “நமது நீதிமன்ற தீர்ப்புகள்” என்று கோடிட்டு பேசியதும் அன்னார் தான்..
கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறையிடம் இருக்கக் கூடாது என்கின்ற சங்பரிவார சிந்தனைகளை எப்போதும் நீதிமன்ற விசாரணையின் போது வெளிப்படுத்தியதும் அன்னார்தான்.
தமிழ்த்தாய் வாழ்த்தை வழிபாட்டு பாடல் என்று குறிப்பிட்டு, அதற்கு எழுந்து நிற்பது அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதமாதாவுக்கு எதிராக பேசுவது மத உணர்வுகளை புண்படுத்துவதாக துடித்தும் உள்ளார்
வெறுப்பு பேச்சுகளையும், பொய், அவதூறுகளையும் பரப்பிய மாரிதாஸ் அன்னார் மூலம் தான் அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பித்தார்.
முருக பக்த மாநாடு என்ற பெயரில் இந்து முன்னணி நடத்திய வகுப்புவாத மாநாட்டிற்கு சவுகரியம் செய்து கொடுப்பது போல தீர்ப்பும் அளித்தது அன்னார்தான்.
சீர்திருத்தவாதம் இந்து திருமணத்தை மாற்றுவதோடு நின்று விட்டது என்று எரிச்சல் பட்டதும் அன்னார் தான்.
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மத மாற்றம் தான் காரணம் என பாஜக கும்பல் தமிழ்நாட்டை மதரீதியாக பிளவுபடுத்திய போது, அதற்கு சாதகமாக, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதனை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியதும் அன்னார்தான். அவரது சோகம் அப்படிப்பட்ட ஒன்று நடக்கவில்லை என்று வெளிவந்துவிட்டது.
கரூரில் எச்சிலைகள் மீது புரண்டு வழிபடுவதை ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை செய்துள்ள நிலையில், அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் மீண்டும் அனுமதி அளித்து அந்த சடங்கு நடக்கவும் காரணமாக இருந்ததும் அன்னார் தான்.
இன்னும் எக்கச்சக்கமான தீர்ப்புகளில் நீதிபதி சாமிநாதன் அவர்கள் அவருடைய சாதிய சனாதன சிந்தனைகளை புகுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் சமூக நீதி, சமத்துவ மரபுகளுக்கு எதிராக பேசியுள்ளார் என்பது வெளிப்படையாக வருகிற விமர்சனம்.
நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக எக்கச்சக்கமான புகார்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதையும் பொது சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் நீதிபதி சாமிநாதன் இந்த விமர்சனங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒன்று இது போன்று வழக்கு விசாரணைகளில் நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இடமாறுதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கு மாறாக தன்னுடைய சித்தாந்த எதிரிகளை பழிவாங்கும் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்துவது எள்ளளவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்த நிலை முற்றிலும் மாறுவதற்கு உச்சநீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்களை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்வது அவசியமாகும்.
— தோழா் மலரவன் ஆர்தர்