பட்டியலினப் பெண் சமைத்த உணவு வேண்டாம்! போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி திருமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக அதே ஊரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்பவர் 13 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி 2018 அன்று, பாப்பாள் வழக்கம் போல சமையல் செய்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஒரு தரப்பினர், பாப்பாள் சமைத்த உணவை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாப்பாள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பாப்பாளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பாப்பாள் மீண்டும் திருமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அதே பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனிடையே தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தது குறித்து பாப்பாள் சேவூர் போலீசில் புகார் அளித்தார்.
88 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இறுதியாக 36 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளிங்கிரி, துரைசாமி, சீதாலட்சுமி ஆகிய 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, அவர்களுக்கு தலா இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் முறியடிக்கப்படவேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வை இந்தத் தீர்ப்பு தந்துள்ளது. இதுபோன்ற தீர்ப்புகளை வரவேற்போம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.