முயல் வேட்டையால் நோ்ந்த மரணங்கள்!
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே ஒரே நாளில் இரு உயிர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லம்பட்டியை சேர்ந்த நரசிம்மராஜ் (45) என்பவருக்கு ஏழாயிரம் பண்ணை அருகே தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒருவர் பிணமாக மிதந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற ஏழாயிரம்பண்ணை போலீசார், உடலை மீட்டனர்.

அதில் இறந்தவர் குல்லூர்சந்தை கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சுரேஷ் (44) என அடையாளம் காணப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, அதிர்ச்சியாக தோட்ட உரிமையாளர் நரசிம்மராஜ் தன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்தது.

விசாரணையில் வெளிப்பட்டது அதிர்ச்சியூட்டும் உண்மை. நரசிம்மராஜ் தனது தோட்டத்தில் மின்வேலியை அமைத்திருந்தார். அதில் முயல் வேட்டைக்காக வந்த சுரேஷ் தவறுதலாக சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதை கண்ட நரசிம்மராஜ், “இது தெரிந்தால் போலீசார் கைது செய்வார்கள்” என்ற கடும் பயத்தில் சுரேஷின் உடலை கிணற்றுக்குள் வீசி விட்டதாக கூறப்படுகிறது.
அச்சம், வருத்தம், மனக்குழப்பம் ஆகியவற்றால் தாங்க முடியாமல் நரசிம்மராஜ் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முறையே சாத்தூர் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுவட்டார மக்களை உலுக்கியுள்ளது. “ஒரு தவறான முடிவு இரண்டு குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது” என அப்பகுதி மக்கள் வலி கலந்த குரலில் தெரிவித்தனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.