“விஜய் அண்ணா எங்களை மறந்துவிட்டாயா ? ” – கண்ணீர் சுவராக மாறிய திருச்சி !
விஜய் அண்ணா, எங்களை மறந்துவிட்டாயா? – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் திருச்சியில் பரபரப்பு !
திருச்சி மாவட்டம் முழுவதும் நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “விஜய் அண்ணா எங்களை மறந்துவிட்டாயே!” என்ற உணர்ச்சிப் பூர்வமான வாசகங்களுடன் வெளிவந்த இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள திருச்சி மாவட்டத்திலிருந்து பயணமான வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை எனும் இரு நபர்கள் பயணத்தின் போது நடந்த துயர விபத்தில் உயிரிழந்தனர்.
அந்த இருவரும் விஜய் ரசிகர்களாக பல ஆண்டுகளாக வெற்றிக்கழகத்தின் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் மறைவிற்கு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் திருச்சி நகரின் பல பகுதிகளில் “முதலாம் ஆண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி” போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர்களில் நடிகர் விஜயிடம் கேள்வி எழுப்பும் பல வரிகள் இடம்பெற்றுள்ளன:
“தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் உயர்நீத்தோம், எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா…”
“15 வருடங்களாக உங்களின் பின்னால் நின்றோம், ஆனால் ஒரு வார்த்தை இரங்கலும் இல்லை…”
“கரூர் துயர சம்பவத்தில் தத்துப் பிள்ளையாக இருப்பேன் என்றீர்கள்; ஆனால் எங்கள் குடும்பம் நடுரோட்டில் கிடக்கிறது…”
என பல வருத்தம் கலந்த வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இதனை ஆதரித்து, “ஒரு ஆண்டு ஆனாலும், விஜய் அண்ணா எங்களிடம் ஒரு இரங்கல் சொல்லவில்லை” என உணர்ச்சி வசப்படுகின்றனர்.
ஒரு ஆண்டாக ரசிகர் குடும்பங்கள் எதிர்பார்த்தது “ஒரு சொல் இரங்கல்” மட்டுமே. ஆனால் அது வராததால், அவர்கள் கண்ணீரில் எழுதிய அஞ்சலி போஸ்டர்கள், திருச்சியின் சுவரில் மட்டுமல்ல — தமிழ்நாட்டின் ரசிகர் அரசியலிலும் ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளன.
— பிரபு பத்மநாபன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.