டிஜிட்டல் மோசடியில் சிக்கிய ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் !
ஓய்வுபெற்ற பெண் பேராசிரியர் ஒருவருக்கு, அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “சென்னையில் உள்ள உங்கள் ஆதார் முகவரியைக் கொடுத்து வாங்கப்பட்ட சிம் கர்ட்டில் ஆபாசப் படங்கள் வீடியோக்கள் இணைய வெளியில் பரப்பப்பட்டு வருகின்றது. நீங்கள் யாரிடம் உங்கள் ஆதார் கார்டைக் கொடுத்தீர்கள்” என்று கேட்க, பதறிப்போனார் பேராசிரியர்.
”எதுவும் எனக்குத் தெரியாது” என்று கூறியவரை, “அப்படியானால் நீங்கள் விசாரணைக்குப் பெங்களூருக்கு வரவேண்டும்” என்று மிரட்டியிருக்கிறது, அந்தப் பெண் குரல். ”வயது 75 ஆகிவிட்டது. எங்கும் வரமுடியாது. வேண்டுமானால் நேரில் வந்து விசாரித்துக் கொள்ளுங்கள்” என்ற அவரது பதில் ஏற்கப்படவில்லை. தொலைபேசியில் தொந்தரவுகள் தொடர்ந்திருக்கிறது.
“புதிய நபர்கள் வீட்டிற்கு வரக்கூடாது. நீங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள்” என்று அச்சுறுத்தியிருக்கிறது, அந்தக்குரல். பயத்தில் அந்த எண்ணை பிளாக் செய்தால், அடுத்த எண்ணில் இருந்து அதே தொந்தரவு. பின்னர் பரிவு காட்டுவதுபோல பேசி, ஆதார் கார்டு நகலை கேட்டிருக்கிறார்கள். இவரும் அலைச்சல் மிச்சம் என அனுப்பி விட்டார். ஆன்லைன் சரிபார்ப்புக்காக, ஓ.டி.பி. சொல்லுங்கள் என்றதும், விழிப்படைந்து கைப்பேசியை முழுமையாக அணைத்துவிட்டார், அந்த பேராசிரியர்.
பின்னர், அங்குசம் இதழை தொடர்பு கொண்டார். நமது வழிகாட்டலில், இணைய மோசடிக்கான இலவசத் தொலைபேசி எண் 1930-க்கு புகார் அளித்தார். வங்கிக்கும் தகவல் அளித்து வங்கி சேமிப்பையும் பாதுகாத்துக் கொண்டார்.
– ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.