டயட்டால் நேர்ந்த விபரீதம்! மரணப் படுக்கையில் சீன சிறுமி!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற வரிகளுக்கு ஏற்ப சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமியான மெய், இவருக்கு இன்னும் சில தினங்களில் பிறந்தநாள் வரவுள்ளது. எனவே பிறந்த நாளிற்கு வாங்கிய உடையை உடலுக்கு ஏற்றவாறு எடையை குறைக்க கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு டயட் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென அவரது உடலின் கைகால்களில் வலிமை இழந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டு பதறிப்போன அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இரத்த பொட்டாசியம் அளவு இயல்பை விடக் குறைந்துவிட்டதாகவும், இதன் விளைவாக இவருக்கு ஆரோக்கியமற்ற உணவு முறையால் ஏற்படும் கடுமையான ஹைபோகாலேமியா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருக்கு 12 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் வரும் காலங்களில் முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று டயட் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.
— மு. குபேரன்.