ஓரம் கட்டப்பட்டாரா, அண்ணாமலை !
அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு, தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவதாக அறிவித்திருப்பது, அவர் அரசியலிலிருந்தே ஒதுங்குவதற்கு சமமானதுதான் என்றே கணிக்கிறார்கள். மோடியின் வரவேற்புக்குழுவில் அவர் இடம்பெறாதது, பாஜகவின் தேர்தல் பிரச்சார அறிக்கை தயாரிப்புக்குழுவில் அவருக்கு இடமில்லாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இனி, அவர் முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவாரா? அல்லது சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வாரா ? என்ற தெளிவான பதில் இன்னும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. பாஜகவின் புதிய தலைமை உள்ளிட்டு தனது அதிருப்தியை கட்சியின் மேலிடத்திற்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள். அண்ணாமலை போன்ற புதிய முகம் இல்லாமல் பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பது கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்றே அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

அதே நேரத்தில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன், அண்ணாமலை வரிசையில் தற்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தொடர்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு எந்த தலைவரும் இவர் அளவுக்கு பில்டப் கொடுத்ததில்லை. மோடியின் தீவிர ரசிகராக அரசியலில் கால்பதித்தவர், மோடியைப் போலவே தனிநபர் துதிப்பாடுவதை அவர் முன்னிலைப்படுத்தியதால்தான் இந்த நிலைமை என்கிறார்கள், சொந்தக் கட்சி வட்டாரத்திலேயே.
முக்கியமாக, தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டே, சினிமா நடிகரை போல தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்திருந்த ஒரே கம்பெனி, “அண்ணாமலை கம்பெனி”தான் என்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் புரிந்தும்தான் கட்சித்தலைமை அண்ணாமலையை ஓரம்கட்டி வைத்திருப்பதாகவும்; இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஐ.பி.எஸ். பதவியையே அசால்ட்டாக தூக்கியெறிந்து அரசியலுக்கு வந்தவர் அண்ணாமலை. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். பொறுத்திருந்து பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள் !
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.