ஈமு கோழி மோசடி 😱 தொழிலதிபருக்கு 7 ஆண்டு சிறை !
தமிழகத்தில் நடைபெற்ற மோசடிகளில் பரவலான கவனத்தை பெற்ற மோசடிகளுள் ஒன்று ஈமு கோழி மோசடி. மாவட்டத்துக்கு மாவட்டம் பல்வேறு பெயர்களில் பண்ணைகளை அமைத்து மோசடியில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கினர்.
அந்த வகையில், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த முகம்மது கலாம்ஜி என்பவர் ராயல் கிங் ஈமு ரிசர்ச் பார்ஃம் என்ற பெயரில் ஈமு கோழியை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக, திருச்சி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் 02/2015 வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்கு, மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் முகம்மது கலாம்ஜிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அதுவும் 8 முறை ஆக மொத்தம் 56 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஜி.முத்துக்குமரன். 8 முறை வழங்கப்பட்ட தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால், 7 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பார். மேலும், 20,000 வீதம் 8 முறை ஆக மொத்தம் ரூ1,60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.

திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் குற்றவாளிக்கு எதிரான ஆவணங்களை திரட்டியும்; அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆனந்த உரிய முறையில் வாதங்களை முன்வைத்தும் குற்றவாளிக்கு உரிய தண்டனையை பெற்றுத்தந்திருக்கிறார்கள். மேலும், குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான உத்தரவையும் பெற்றிருக்கிறார்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.