G Pay – நோட்டு போட்டு தீபாவளிக்கு கல்லா கட்டும் ஆபிசர்ஸ் !
G Pay மற்றும் நோட்டு போட்டு தீபாவளி மாமூல்: தீயணைப்பு துறையினரிடம் ரூ.4.94 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிரடி சோதனை!
விருதுநகர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நோட்டு போட்டு மாமுல் வசூலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான விருதுநகர் தீயணைப்பு துறையினரிடமிருந்து, கணக்கில் வராத ரூ.4.94 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பட்டாசு கடைகள், மரக்கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மாமுல் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
அதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, தீயணைப்பு வீரர்கள் ஹரிச்சந்திரன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தேகத்திற்கிடமாக அங்கிருந்து செல்வதை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பல்வேறு கடைகளில் தீபாவளி மாமுல் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இந்த வசூலில் தீயணைப்பு வீரர் வினோத் என்பவரும் தொடர்புடையவர் என தெரியவந்த நிலையில் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், நோட்டு போட்டு மொத்தம் ரூ.4.94 லட்சம் வசூல் செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதில், ரூ.59,500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வினோத் என்பவரது வங்கி கணக்கில் ரூ.3.79 லட்சம் டெபாசிட் செய்ததும், ஜி-பே, போன் பே மூலமாகவும் தொகை வசூலித்ததும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் மூவரிடமும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.