கங்கைகொண்ட சோழபுரம்: ஒரு வரலாறு – இரு பெரும் விழாக்கள்!
விழா 1:
ஆடி திருவாதிரை நாளில் மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது திராவிட மாடல் அரசு. இன்று அந்த விழா அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழர் காலத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்புடன், தமிழ்நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் நிலையில், இராசேந்திர சோழன் உருவாக்கிய சோழகங்கம் (பொன்னேரி) எனும் ஏரியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் நீர்வள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அத்துடன், சோழகங்கம் ஏரிப்பகுதியை சுற்றுலாதலமாக்க 7.25 கோடி ரூபாய்க்கான திட்டத்தை அறிவித்துள்ளார். இராசேந்திர சோழனின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 10 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கங்கைக்கரை வரை படையெடுத்துச் சென்று வடவர்களை வென்று, கங்கை கொண்ட சோழன் என்ற பட்டத்தைப் பெற்ற இராசேந்திரசோழன், அதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரையும், அதில் சோழீஸ்வரர் (பிரகதீஸ்வரர்) திருக்கோயிலையும் அமைத்ததுடன், வடபுலத்தில் வென்ற மன்னர்களை பொன்குடங்களில் கங்கை நீரை சுமந்து வரச் செய்து, கொள்ளிடத்தின் வடபுறத்தில் ஏரிப்பாசனத்தை மேம்படுத்த 16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்ட சோழகங்கம் என்ற பரந்து விரிந்த ஏரியை உருவாக்கி, அதில் குடங்களில் கொண்டு வந்த கங்கை நீரை கொட்டச் செய்தார். கொள்ளிடத்திலிருந்து கால்வாய் அமைத்து, சோழகங்கத்திற்கு நீர் கிடைக்கச் செய்தார். சோழகங்கத்தின் வடிகாலாக அமைந்திருப்பதுதான் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புகழ்பெற்ற வீராணம் (வீரநாராயண) ஏரி.
கடற்படை மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் புலிக்கொடியை பறக்கவிட்ட இராசேந்திர சோழ மன்னரின் அரசு நிர்வாகம், நீர் மேலாண்மை, படைபலம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.
விழா 2:
திருவள்ளுவருக்கு காவிப் பெயிண்ட் அடித்து கபளீகரம் செய்ய நினைப்பதுபோல, சைவ சமயக் கோயில்களைக் கட்டிய இராசேந்திர சோழ மன்னனையும் குறி வைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கங்கைக் கரை நோக்கி இராசேந்திர சோழன் படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு இது என்பதால் அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா எடுத்து, நினைவு நாணயம் வெளியிடும் நிகழ்வும், சைவ சமயம் சார்ந்த கண்காட்சியும், இசைஞானி இளையராஜாவின் கச்சேரியும் ஜூன் 27ல் நடைபெறவிருக்கிறது.
மாமன்னன் இராசேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரம் அதன்பிறகு 250 ஆண்டுகள் சோழ வம்சத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. வரலாற்று நூலாசிரியர் நீலகண்ட சாஸ்திரி கங்கைகொண்ட சோழபுரத்தை பாபிலோன் நகரத்திற்கு ஒப்பிடுகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நகரத்தில் எஞ்சியிருக்கும் கட்டடம் கோயில் மட்டும்தான். அதுவும் பலவித சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்டு, அண்மைக்காலத்தில் பொலிவு பெற்றுள்ளது. சோழ மன்னர்களின் அரண்மனை, அவர்கள் அமைத்த நகரக் கட்டமைப்பு, சோழமன்னர்கள் கட்டிய பிற கட்டடங்கள் எங்கே போயின? யாரால் அழிந்து போயின?
பா.ஜ.க.வினர் வழக்கமாகக் கதைவிடும் மொகலாயர்களாலா? டெல்லி சுல்தான்களாலா? ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்களாலா? இல்லை. மாமன்னர்கள் இராசராச சோழனும் அவரது மகன் இராசேந்திர சோழனும் கட்டியமைத்த சோழ சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தியவர்கள் பாண்டிய மன்னர்கள். அவர்களும் சைவ சமய நெறியைப் பின்பற்றியவர்கள்தான். வைணவத் திருத்தலங்களுக்கும் உபயங்களைச் செய்திருக்கிறார்கள். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையெடுப்பு, மூன்றாம் இராசராச மன்னனை கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து பழையாறை நோக்கி பின்வாங்கச் செய்தது. போரில், சோழர்களின் நகரங்களை சிதைத்தது. சோழப் பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தது.
தங்கள் கட்சியில், பா.ஜ.க.வினருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் தலைவரும் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு வந்தால் காமராஜர், எம்.ஜி.ஆர். புகழ்பாடுவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்த எம்.ஜி.ஆர்.தான், சோழப் பேரரசை வீழ்த்திய மாறவர்மன் சுந்தரபாண்டியன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கி, கதநாயாகனாக நடித்தவர். அதனால், அந்த ‘கேட்’டும் மோடிக்கு மூடப்பட்டுவிட்டது.
வழக்கம்போல கஜினி முகமது, ஔரங்கசீப் மீது பழிபோட்டு அரசியல் செய்வுதற்கு சோழ நாட்டில் பா.ஜ.க.வுக்கு வழியே இல்லை. பாண்டியர்கள், அதன்பிறகு விஜயநகரப் பேரரசு வழி வந்த நாயக்கர்கள், அப்புறம் வீர சிவாஜி வழிவந்த மராட்டியர்கள் என சைவ-வைணவத் திருக்கூட்டம்தான் சோழநாட்டை ஆட்சி செய்தது. பழிபோடுவதென்றால் அவர்கள் மீதுதான் மோடிஜி போட வேண்டும். ரொம்ப சங்கடம்ல…
மூத்த பத்திரிக்கையாளா் – கோவி லெனின்