முதலாளி ஆக்குறேனு முட்டுச்சந்தில் நிறுத்திய … கோ ஃப்ரீ சைக்கிள் மோசடி !
கோ ஃப்ரீ சைக்கிள் மோசடி
நட்சத்திர ஹோட்டல்களில் சினிமா பிரபலங்களை வைத்து விழா நடத்தி, மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சால் மயக்கி சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் பலரை ஏமாற்றியிருக்கிறது, ஒரு மோசடி கும்பல்.
புதுச்சேரியை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும், இந்த மோசடியில் ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 50 கோடி ரூபாய் வரையில் சுருட்டியிருப்பதாக தெரிவிக்கிறார்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்.
கோ ஃப்ரீ சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தை சூரத்தில் நடத்தி வருவதாகவும்; இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களுக்கு தங்களது பிராண்டை சப்ளை செய்து வருவதாகவும்; 50 சைக்கிள்களுக்கான விலையான ரூ.4.5 இலட்சத்தை கொடுத்தால், மாதந்தோறும் ரூ.5250 வட்டி தருவதாகவும்; 9 மாத முடிவில் முதலில் கட்டிய முழுத்தொகையையும் திருப்பித் தந்துவிடுவதாகவும் கதை அளந்து விட்டிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உண்மையில், சூரத்தில் அப்படி ஒரு சைக்கிள் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறதா? யாரெல்லாம் அந்த நிறுவனத்தின் டீலர்களாக செயல்பட்டு வருகிறார்கள்? என்பதையெல்லாம், ஆராயாமல், அவர்களது மூளைச்சலவை பேச்சில் மயங்கி பணத்தை கட்டிவிட்டு தற்போது வழக்கம் போல, கையறு நிலையில் இழந்த பணம் எப்போது கிடைக்கும் என பரிதவித்து நிற்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
அந்நிறுவனத்தின் நிறுவனர் நிஷாத் அகமது, இக்பால் பாட்ஷா, அஜய்முருகன், கிருஷ்ணகுமார் ஆகிய நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருக்கும், புதுச்சேரி மாநில சைபர் கிரைம் போலீசார் தலைமறைவு குற்றவாளிகள் நால்வரையும் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரியில் கோ ஃப்ரீ சைக்கிள்ஸ் என்ற பெயரில் கைவரிசை காட்டியிருக்கும் இதே கும்பல், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் லிங்க் லைன் கம்பெனி என்ற பெயரில் மோசடி செய்து வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றவர்கள் என்ற விவரம் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
உலக சுற்றுசூழல் தினம் உள்ளிட்ட தினங்களில் சைக்கிள் போட்டிகளை நடத்துவது, மாரத்தான் நடத்துவது, அந்நிகழ்வுகளுக்கான ஸ்பான்சர்களாக சில இலட்சங்களை செலவு செய்து புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். மதுரை முத்து, அண்ணபாரதி, ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பிரபலங்களை அழைத்து வைத்து நட்சத்திர ஓட்டல்களில் விழா எடுத்து மூளையை கழுவியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் நியோமேக்ஸ் பாணியில், சுற்றத்தையும் மகிழ்வித்து மகிழ வேண்டும் என்ற கோட்பாட்டின்படி, மாமன், சித்தப்பா, சித்தி, அண்ணா, அண்ணி என சொந்த குடும்பம் அத்தனையையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 36 இலட்சம் வரையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
தேனொழுகும் பேச்சில் மயங்கி, முதலாளி ஆகும் கனவில் 4.5 இலட்சத்தை முதலீடு செய்தவர்களையெல்லாம் முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டது, மோசடி கும்பல் !
— அங்குசம் புலனாய்வுக்குழு.