நீதி தேவதை – தைரிய சாட்சி !
சாத்தான்குளம் தீர்ப்பின் ‘நீதி தேவதை’ காவலர் ரேவதி தான். அன்றுவரை, ‘அய்யா… அய்யா’ என சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே… தன்னுடன் சிரித்து, பேசி, மகிழ்ந்து ஒன்றாக பயணித்த சக காவலர்களுக்கு எதிராகவே… நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் சாட்சியம் அளிக்கப்போகிறோம்; அந்த சாட்சியம் தன் சக காவலர்கள் 10 பேரின் சீருடைகளையே கழற்றவைக்கும், அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்கவைக்கும்; அவர்களது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் என எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.
நீதிபதிகளுக்கு தேவை சாட்சியங்களும் ஆதாரங்களும். சி.பி.ஐ. ஒருவேளை, சாட்சியங்களையும் ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த வழக்கு நீர்த்துப் போயிருக்கும். எனவே, இதயத்தில் ஈரம் இருக்கும் ரேவதிக்களின் துணிச்சலான வாக்குமூலம்தான், நீதிபதியை தீர்ப்பு எழுதவைத்தது. காவலர் ரேவதிக்கும் அவருடன் சாட்சியம் அளித்த மற்ற காவலர்களுக்கும் பாராட்டுகள். நிச்சயமாக, இவர்களுக்கு தமிழ்நாடு அரசு பதவி உயர்வு கொடுத்து ஊக்கப்படுத்தவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற காவல் சித்திரவதைகள் நிகழும்போது தைரியமாக சாட்சி அளிப்பார்கள்.
அதேபோல், இன்று 9 காவலர்களும் சட்டத்தால், நீதிமன்றத்தால் அடைந்துகொண்டிருக்கும் துன்பத்தைவிட, இவர்களால் தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்ஸும் அன்று காவல்நிலையத்தில் பல்லாயிரம் மடங்கு சித்திரவதையை அடைந்து மரணத்திருக்கிறார்கள்.
மரண தண்டனை கூடவே கூடாது என்பவள் நான்! இவர்கள், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு செய்த சித்திரவதைகளுக்கு, மரண தண்டனையை கொடுத்து, ரண வேதனையிலிருந்து விடுவிக்கவேண்டுமா என்ன? ஆயுள் தண்டனை கொடுத்து, இன்னும் இன்னும் அவர்கள் செய்த சித்திரவதையை எண்ணி எண்ணி துடித்துக்கொண்டே இருக்கவேண்டும்; தவறை உணரவைக்க வேண்டும். மரணதண்டனையை கொடுத்து, அவர்களை விடுவித்துவிட வேண்டாம்! நீதியின் பெயரால் அவர்கள் செய்த தவறை நீதிமன்றமும் செய்யவேண்டாம்!
— வினி, பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.