தலைமை ஆசிரியர்கள் இன்றி தள்ளாடும் அரசுப்பள்ளிகள் !
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் முறையாக நிர்வாகம் செய்ய முடியாமல் பள்ளிகள் சீர்கெடும் சூழல் உருவாகி வருகின்றது.
பள்ளி மேலாண்மை குழு, நம்ம ஊரு நம்ம பள்ளி, நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், தகை சார் பள்ளி திட்டம், மாதிரி பள்ளிகள் திட்டம், கலைத்திருவிழா, அறிவியல் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட திட்டம், குவித்திறன் தேவைப்படும் மாணவர்கள் என நாள்தோறும் தமிழ்நாடு அரசாலும் பள்ளிக்கல்வித்துறையினாலும் திட்டங்கள் வந்து கொண்டே உள்ளன.
இவைகள் மட்டுமில்லாமல் ஏற்கனவே பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், பசுமை படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் போன்ற இயக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இடையிடையே தேசிய மற்றும் மாநில திறன் சோதித்தல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி செயல்பாடு மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவ்வளவு திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் திணறுகின்றன.
போட்டிகளை அறிவிப்பது, உரிய பயிற்சிகளை வழங்குவது, அதை தகுதி வாய்ந்த நடுவர் குழுவோடு நடத்துவது, தேர்வு பெற்ற மாணவர்களை இணையத்தில் ஏற்றுவது, ஒரு சில கலைத் திருவிழா போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவர்களின் திறன்களை காணொளிகளாக பதிவேற்றம் செய்வது என அளவற்ற வேலைகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளது. போட்டிகளை பெயரளவுக்கு நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள் ஆசிரியர்கள்.
இவ்வளவுக்கு மத்தியில் பள்ளி நிர்வாகம் சிறப்பாக செயல்பட தலைமையாசிரியர் பொறுப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பொறுப்புத் தலைமை ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
பொறுப்புத் தலைமை ஆசிரியர்களின் அனுபவமின்மை, சக ஆசிரியர்களின் மீது வன்மத்தோடு செயல்படுதல், புரிதல் அற்ற நிர்வாகம் போன்ற காரணங்களால் பள்ளிகள் பெரும் சீர்கேட்டிற்கு ஆளாகி வருகிறது. பொறுப்பற்ற சூழலும் உருவாகிறது.
பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரே பள்ளியில் தலைமை ஆசிரியராக செயல்பட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில்லை. காரணம் ஒரே பள்ளியில் சக ஆசிரியர்களாக பணியாற்றியவர்களிடம் தலைமை ஆசிரியராக உடனடியாக அதிகாரம் செலுத்துவது சிக்கலானது. அதற்காகத்தான் ஆசிரியப் பணியில் இருந்து தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் நியமனம் செய்கிறார்கள்.
தற்பொழுது உள்ள சூழலில் பள்ளியில் பணி மூப்பு அடிப்படையில் உள்ள ஆசிரியரை பொறுப்புத் தலைமை ஆசிரியராக செயல்பட வைப்பதால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகிறது. பல ஆசிரியர்கள் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். பள்ளி மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதேநிலைத் தொடர்ந்தால் அரசு பள்ளிகளின் நிர்வாக சீர்கேடு உச்சம் பெறும். மாணவர் சேர்க்கை பெருமளவு குறையும். தனியார் பள்ளிகள் தலைவிரித்தாடும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
— மெய்ச்சுடர், ஆசிரியர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.