அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கு மனு தள்ளுபடி ! உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி, அதிமுக சார்பில் இன்பதுரை எம்.பியும், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவரான ஆதிநாராயணனும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 4ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக் வந்தது. அப்போது, நகராட்சித்துறை மீது வழக்குத் தொடர நீங்கள் யார் என்று ஆதிநாராயணனைக் கேட்ட முதன்மை அமர்வு, மனுதாரர் ஆதிநாராயணன் தன்மீது நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான பல உண்மைகளை மறைத்து, அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை பொதுநல மனுவில் ஆதிநாராயணன் முழுமையாக தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு, மனுதாரர் ஆதிநாராயணன் தனது மனுவின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (20/02/2026) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத்துறைக்கு எதிராக ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. அதிமுக சார்பில் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை மட்டும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
— மணிபாரதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.