10. கல்கி அவதாரம்:-
பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் அவதாரம் எடுத்து உலகை அழித்து நம்மை முக்தி நிலைக்கு கொண்டு வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து விட்டாரா? அல்லது இனிமேல் தன் எடுக்கப் போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும், இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தைச் சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவருக்கு சமர்ப்பணம் செய்து அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் ஒரே வழியாகும்.bகிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தரும புத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனை தொடர்ந்து வைகுண்டம் போனார்கள். கலி பிறந்ததும் கலி தோவித்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேத தர்ம மார்க்கங்கள் மறைந்துவிடும்.

ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன் மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போல காணப்படும். செடிகள் அனுவென சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டானம் அற்று போவதால் வீடுகள் சூனியப் பிரவேசமாகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படி கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார். சராசர குரு என்றும் சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணு உடைய அவதாரம் தர்மத்தை காப்பாற்றவும் சாதுக்களை அவர்களுடைய கர்ம தளைகளில் இருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும். சம்பள கிராமத்தில் முக்கிய மாணவர்களும் மகாத்மாவாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.

அணிமாதி அஷ்டமா சித்தியுடன் சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோக நாயகன் வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர். அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்ட பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவ குண சிலராக பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடம் ஆன பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மீண்டும் இதே சுழற்சி நடைபெறும். மக்களின் பிறப்பும் சாத்வீகமாக திகழும். சூரியன் சந்திரன் குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடி தோன்றக்கூடிய கிருதயுகம் ஆகும். ஸ்ரீஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் கேட்டாலோ, படித்தாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும் மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமந் பாகவதம் கூறுகிறது. யுகங்கள் நான்கு வகைப்படும் அவை; க்ருதயுகம், திரோதா யுகம், துவாபரயுகம், கலியுகம். இதில் க்ருதயுகம் – 17,28,600 வருடங்களும், திரேதா யுகம் – 92,96,000 வருடங்களும், துவாபர யுகம் – 8,64,000 வருடங்களும், கலியுகம் – 4,32,000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் ஆகும்.
கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமாள் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு:–
முதல் யுகத்திற்கு நாள் எட்டு, இரண்டாவது யுகத்திற்கு நாள் ஆறு, மூன்றாவது யுகத்திற்கு நாள் நான்கு, நான்காவது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருவதும் கர்ப்பம் முடிக்கக்கூடிய நாள்கள் (அதாவது ஓராயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பம் ஆகும்) 60\*60\*60=216000 நொடி = 1 நாள். அதாவது நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60 வினாடி ஒன்றுக்கு நொடி 60 இப்படி நாள் இரண்டிற்கு 4,32,000 நொடி. இந்த 4,32,000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த கலியுகம் தோன்றி 5,126 வருடங்கள் தான் ஆகிறது. இன்னும் கலியுகம் முடிவடைய 4,26,874 ஆண்டுகள் மீதமுள்ளன.
கலியுகம் முடியும்போது மீண்டும் தர்மத்தை நிலை நாட்ட தனது பத்தாவது மற்றும் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை எடுத்தாக புராணங்கள் சொல்கின்றன. பெருமாள் எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு காரணம் நோக்கம் உள்ளது. மேலும், தசாவதாரம் என்பது இந்து சமய கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். கருட புராணத்தில் இந்த அவதாரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. சில நூல்களில் அவர் பௌர்ணமி நாளில் பைசாகி பண்டிகையின் போது பிறக்கலாம் என்றும் வேறு சில நூல்கள் மார்க்க சீர்விம் மாதத்தில் பிறப்பார் என்றும் கூறுகின்றன. கல்கி என்ற சொல்லுக்கு காலம் அல்லது முடிவிலி என்றும் பாவநாசன் என்றால் தீமையை அழிப்பவர் என்றும் பொருள். மேலும் இது புதிய யுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
-பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.