பள்ளி கிணற்றில் விடுதி மாணவன் சடலம் ! பெற்றோர் போராட்டம் … !
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ என்ற பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்தார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 1 ந்தேதி காலையில் முகிலன் விடுதியில் இல்லை , பள்ளிக்கும் வரவில்லை என , மாணவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு பள்ளி நிர்வாகத்தினர் தெரியப்படுத்திருந்தனர்.
மகன் வீட்டுக்கும் வராததால், பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று நிர்வாகியிடம் முறையிட்டுள்ளனர் . பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர் தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மாயமான முகிலனை தனிப்படை அமைக்கப்பட்டு தேடத் தொடங்கினர்.
முதற்கட்டமாக பள்ளியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மாயமானதாகக் கூறப்படும் அன்றைய தினம் பள்ளிக்குப் பின்புறமாக முகிலன் சென்ற காட்சி பதிவாகியிருந்ததை கண்டுபிடித்தனர்.
சந்தகமடைந்த போலீஸார்கள் மறுநாள் பள்ளி முழுவதும் சோதனையிட்டனர் அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு வேலியால் மூடப்பட்டு பூட்டிக்கிடந்த கிணற்றை திறந்து பார்த்தபோது அதற்குள் பள்ளி சீருடையில் முகிலன் சடலமாக மிதந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நின்றனர். அவனது பெற்றோர்கள் கதறி அழுது துடித்தனர்.
கிணற்றின் நுழைவாயில் பூட்டிக்கிடக்கும் போது மாணவன் விழுந்தது எப்படி?’ எனச் சந்தேகம் எழுப்பிய பெற்றோரும், உறவினர்களும் மாணவன் சாவில் மர்மம் இருக்கிறது முகிலனின் முகம் மற்றும் உடல் பாகங்களில் தீக்காயங்கள் உள்ளது. அவனை யாரோ அடித்து கொலை செய்து இருக்கலாம் “பள்ளியின் பாதிரியார் ஜேசு மாணிக்கத்தை” உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி சாலையை மறித்தனர்.
மாணவன் குடும்பத்துக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி . திமுக நகர செயலாளர் எஸ் ராசேந்திரன் தவெகவினர் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென அவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த பள்ளியில் தடய அறிவியல் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. `மாணவன் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம்’ என்று மாணவனின் பெற்றோர்கள் கூறி தகவலால் திருப்பத்தூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது போலீசார்களும் விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில் (ஆகஸ்ட் 4 )இன்றும் மாணவனின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை பெற்றோர்கள் ஏற்காமல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
மாணவன் உடல் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் முகப்பு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி கிணற்றுக்குள் குதிப்பதோ, தவறி விழுவதோ சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும்போது, `மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என்று திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதன் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் எண்ணம் இருப்பது உறுதியாகிறது. மாணவனின் மர்ம மரணத்தில் தொடர்புடைய எவரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. அத்துடன் மாணவன் முகிலனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவன் அதே பள்ளியின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பையும் பெற்றோர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
— மணிகண்டன்