வெள்ளையும் சொள்ளையுமா இப்படியும் ஒரு மோசடியா ?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பட்டுராஜன் (52), கட்சியினர் கந்தநிலா (55), ராணி நாச்சியார் (53) ஆகியோர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஒன்றைத் தொடங்கி, “இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று கூறி மக்களிடமிருந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், தாங்கள் போலியாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அனுமதி பெற்றதாக நம்ப வைத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாயை வசூலித்ததாக, பணத்தை இழந்த வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், மூவரும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் மேலும் சிலர் தொடர்புடையவர்களாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்க தீவிரமாக தேடுதல் நடைபெற்று வருகிறது.
இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கழகச் செயலாளராகவும், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும் பல்வேறு கட்சி பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.