மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் – கூட்டறிக்கை வெளியீடு
திருப்பரங்குன்றம் என்பது முருகனுக்கான கோவில் மட்டுமல்ல, பல வழிபாட்டுச் சின்னங்களின் இருப்பிடம். பண்பாட்டு பன்மைத்துவம் கொண்ட மலை. இறைச்சி உண்ணும் முருகன் எனும் வேடன், விளிம்பு நிலை மக்களின் நிலக் கடவுள் கருப்பண்ணசாமி, உயர் நிலைக் கடவுளான காசி விஸ்வநாதர், எண்ணிலடங்கா சித்தர்கள், சப்த கன்னிமார்கள் என்ற பெண் தெய்வங்கள், உச்ச பட்ச கொல்லாமையை வலியுறுத்தும் தமிழ் சமணம், இஸ்லாமிய மசூதி, தர்கா, எனப் பண்பாட்டு கூட்டணியாகத் திகழும் மலைதான் திருப்பரங்குன்றம். நூற்றுக்கணக்கான சிறு, குறு வணிகர்கள் திருப்பரங்குன்றத்தின் பன்மைத்துவந்தால் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ஆதி காலம் முதல் இன்று வரை திருப்பரங்குன்றம் மலை எல்லோருக்குமானது என்பதே வரலாற்று உண்மை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட மாமதுரையின் இயல்பும், உயிர்நாடியும் திருப்பரங்குன்றம் மலையைப்போல் நல்லிணக்கம்தான்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைதியாக வாழும் மக்களிடையே மதவெறுப்பைத் தூண்டி அரசியல் அறுவடை செய்யலாம் என பாஜக மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிரான இயக்கங்கள் முயற்சித்து வருகின்றன. திருப்பரங்குன்றம் முருகனுக்கும், மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் அவரவர் வழிபாட்டு முறையில் எந்த இடையூறுமின்றி பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடந்து வந்த சூழலில், திடீரென “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கிறார்கள்; ஆடு, கோழி வெட்டி முருகனின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார்கள்”என்ற புரளியைக் கிளப்பிவிட்டு “திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம்” என மத வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் வகையில் இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் மதுரையில் மையங்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
12.12.2024 அன்று ஐந்து மசூதிகள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தீர்ப்பின்படி ‘இந்தியா முழுவதும் 1947-ஆம் ஆண்டில் இருந்துவரும் வழிபாட்டுத் தலங்களை மாற்ற எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்ய இயலாது. ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளில் சொல்லப்பட்ட உத்தரவுகளும் செல்லாது. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து எல்லா வழிபாட்டுத் தலங்களும் உள்ளது உள்ளபடி தொடர வேண்டும். மீறினால், மூன்று வருட தண்டனைக்குரிய குற்றம் அது. மூன்று வருடத் தண்டனைக்குரிய குற்ற இடங்கலாக , சர்ச்சைக்குரிய இடங்கலாக வழிபாட்டுத் தலங்களை மாற்ற முயற்சிப்பதேன்? அதற்கு முருக பக்தர்களை துணைக்கழைப்பதேன்? என்ற கேள்விகள் எழுகின்றது.

சிக்கந்தர் தர்கா ஒரு வரலாற்று அடையாளம். மதுரை உள்ளிட்ட தமிழக மக்கள் மிகுந்த மரியாதையோடு தர்காவை ஆதரித்து வருகின்றனர். சில வருடங்களாக வெளியிலிருந்து வந்து மதுரையில் தங்கிக் பணிசெய்துவரும் சில குழுவினர், ஒரு வேலைத் திட்டமாக, தர்காவை – சர்ச்சைக்குரிய இடமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் நல்லிணக்க மண். அதன் வரலாறு மிகத் தொன்மையானது. அதன் ஆணிவேர் அன்பும், சமாதானமும் மட்டுமே. அது சிதைபடுவதை மதுரை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
உத்தரப்பிரதேசத்தில் இராமனையும், ஒரிசாவில் பூரி ஜெகன்னாதரையும் மராட்டியத்தில் பிள்ளையாரையும் கையிலெடுத்து, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்து, கலவர அரசியல் செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சியினர்தான், தமிழ்நாட்டிலும், தமிழ்க்கடவுள் என அறியப்படும் முருகனைக் கையிலெடுத்திருக்கிறார்கள். பக்தர்கள் புனிதமாகக் கருதும் ‘வெற்றி வேலை’ அரசியல் சார்ந்த சூலாயுதமாக ஏந்தி மதுரை மண்ணின் உயிரான மதநல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.எப்படியாவது, வன்முறை வெறுப்பைத் தூண்டி, மக்களைப் பிளவுபடுத்தி தமிழ்நாட்டில், அதிகார அரசியல் செய்யலாம் என்ற முயற்சியின் வெளிப்பாடே இந்து முன்னணியின் ஜூன்.22 – முருக பக்தர்கள் மாநாடு.
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்விநிதியைத் தராமல், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கும் தேசிய கல்விக் கொள்கையைத் திணித்து, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கி, மதுரைக்குத் தேவையான அடிப்படை வளர்ச்சித் திட்டங்களான எய்ம்ஸ் , மெட்ரோ போன்றவற்றிற்கு நிதி ஒதுக்காமல், வஞ்சகம் செய்து வரும் பா.ஜ.க அரசு, தனது மக்கள் விரோத கொள்கைகளை மறைக்க மதத்தைக் கையில் எடுத்து அரசியல் வருகிறது. நாடாளுமன்ற சனநாயகம், அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ, சனநாயக, கூட்டாட்சி மரபுகளை ஒழித்துக்கட்டி, சனாதன சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் ஆர்.எஸ்.எஸ், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், மதத்தை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றன.
“யாதும் ஊரே! யாவரும் கேளீர்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய வாழ்வியல் நெறிகளையும், வள்ளலார் , வைகுண்டர், அயோத்திதாசர் வகுத்த சமத்துவ ஆன்மீக மரபையும் கொண்ட தமிழ் மக்கள் ‘முருக பக்தர்கள் மாநாடு’ எனும் பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நடைபெறும் மதவெறி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். இந்து முசுலீம், கிறித்தவம் உள்ளிட்ட மதங்கள் அமைதியாகவும் ,பல்லாயிரம் மக்கள் ஒற்றுமையுடன் திரளும் கள்ளழகர் திருவிழா, சமண ,புத்த ,குலதெய்வ வழிபாட்டையும், தொன்ம வரலாற்றை – மத நல்லிணக்கத்தை அடையாளமாகக் கொண்ட – மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.! தமிழ்நாட்டின் மரபை,மாண்பை சீர்குலைக்க முயலும் மதவெறி சக்திகள் மீது தமிழ் நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
யாதும் ஊரே – யாவரும் கேளிர்
வாழ்க வையை ஆற்றின் வளம் தரும்நாடு