தாலுகா பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுமா ?
”தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இதில், அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி மாநிலம் முழுவதும் 3,400 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர். எனவே, நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான தகுதிகள், யாரெல்லாம் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்த விளக்கமான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஜனநாயகத்தின் நான்காம் தூணாகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் நல வாரியத்தில், விடுபட்ட (ஆசிரியர் குழு தொடங்கி, கடைநிலை ஊழியர்களான வட்டாரச் செய்தியாளர்கள் வரை) அனைவரையும் சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோருகிறது.
பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பணியின் போது மரணமடையும் பத்திரிகையாளர் குடும்ப நிதித் திட்டம் ஆகியவற்றில் பழைய அரசாணையின்படி, அச்சு ஊடகத்தினர் (Print media) மட்டுமே பயன்பெற முடிகிறது. இந்த இரு திட்டங்களிலும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படக் கலைஞர்களை சேர்க்கும் வகையில் உரிய அரசாணைகளைப் பிறப்பித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.