நான் சேனல் ஆரம்பிக்கவே உங்கப்பா தான் காரணம் – கலாநிதி மாறன்
சன் குழுமத்தின் எல்லா வெற்றிகளுக்கும் அவர் ஒருவரே காரணம்.
தோற்றுப் போனவர்கள் அவரைப்பற்றி ஆயிரம் குறைகளை அள்ளி வீசலாம்
அது வயிற்றெரிச்சல் அல்லது விரக்தியின் வெளிப்பாடு..!
கலைஞர் குடும்பத்தில் பலர் பல தொழில்களில் ஈடுபட்டும் ஒருவர்கூட அவரைப் போல உச்சம் தொட முடியவில்லை!
அவர் தொட்டதெல்லாம் துலங்கியது என்றால் அதற்கு காரணம் அவரது திட்டமிடல் – தொழில் நேர்த்தி – உழைப்பு – உறுதியான கடமை உணர்ச்சி!
சிறு நிறுவனமாய் துவங்கிய காலம் தொட்டு அவர் தன்னை சுற்றி ஒரு போதும் ஒளி வட்டம் போட்டுக் கொண்டதில்லை. இரவு பகலாய் உழைத்தார் .. இயல்பாக இருந்தார்.. வெற்றிகண்டார்..
யாரையும் சார்ந்து இருக்கமாட்டார். தன்னிடம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும், ’போகிறேன்’ என்றால் ’போய் வா’ என புன்னகையோடு அனுப்பி விடுவார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் அரசியலை அலுவலகத்திற்குள் விடமாட்டார்.
ஜாதி மதம் இனம் என்று எந்த பேதமும் அவர் நடத்தும் நிறுவனங்களில் இருந்ததில்லை.
வீண் பேச்சு, வெட்டி பந்தா எதுவும் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.
ஒருமுறை கீழ் தளத்தில் தன் அறையிலிருந்து சன் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் செய்திகளில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பார்த்து கடுப்பாகி, மேலே சன் டிவி ஆபீசுக்குள் வந்து செய்தி அறையின் கதவை மூடி சாவியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
அந்த அளவிற்கு கலைஞரையே வெறுப்பாக்கும் அளவிற்கு அதிமுக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து போட்டு விட்டார்கள். அந்த சூழலில் கூட ஊழியர்களை பலிகடா ஆக்காமல் கலைஞருடன் மல்லுக் கட்டியவர் கலாநிதி மாறன் .
சென்னையில் இருந்தபடியே இந்திய மீடியா ஜாம்பவான்களையெல்லாம் திகிலடைய வைத்த ஆளுமை அவருடையது! 2008 ஆம் ஆண்டு, தற்போது தனிச்சுற்றுக்கு இதழ் நடத்துபவரும், இன்றைய தேதியில் ரெம்பவே துள்ளிக் குதிப்பவருமான ‘துக்ளக்’ குரு மூர்த்தியின் நண்பர் ZEE TV அதிபர் சுபாஷ் சந்திரா, இரண்டு மூறை தோற்று மூன்றாம் மூறையாக சென்னையில் மீண்டும் ZEE TAMIL நிறுவனத்தை ஆரம்பிக்க சென்னை வந்திருந்தார்.
அப்போது அவர் தன் மகன் புனித்துடன் கலாநிதி மாறனை சந்திக்க விரும்பினார். அப்போது ZEE TAMIL தலைவராக இருந்த சந்துரு சார் (chandra barathi) கேட்டுக் கொண்டதற்கிணங்க நான்தான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்.
திமுகவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலாநிதிமாறன் அறிவாலயத்திலிருந்து வெளியேறி மைலாப்பூரில் ஒரு தற்காலிக இடத்தில் அலுவலகம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அது.
கலாநிதிமாறனை புனித்துடன் சென்று சந்தித்தார் சுபாஷ் சந்திரா. இருவரையும வெளியே வாசலுக்கு வந்து கலாநிதி மாறன் வர வேற்று அழைத்துச் செல்ல ஒரு குற்ற உணர்வில் நெளிந்து கொண்டிருந்தார் சுபாஷ் சந்திரா.?
அப்போது பேசிக் கொண்டிருந்த போது சுபாஷ் சந்திரா தன் மகனிடம் ’கலாநிதி என்னை மும்பையில் பார்க்க வந்த போது நான் அவரை பார்க்கவே இல்லை .. இப்போது எப்படி வளர்ந்திருக்கிறார் பார் அவரிடமிருந்து தொழில் எப்படி நடத்துவது என்று கற்றுக் கொள்’ எனச் சொல்ல, உடனே குறுக்கிட்ட கலாநிதி மாறன் புனித்தை பார்த்து ’அன்று நான் தேடி வந்த போது உங்க அப்பா என்னை பார்த்திருந்தால் நான் இந்த சேனலை ஆரம்பித்திருக்கவே மாட்டேன்.. நான் சேனல் ஆரம்பிக்கவே உங்கப்பாதான் காரணம்..’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.
அன்று ZEE TV அலுவலகத்தில் இது தான் பேசு பொருளாக இருந்தது !
அதாவது 1992 ஆம் ஆண்டு தமிழில் ஒரு மணி நேர டிவி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப நினைத்த கலாநிதி மாறன் அப்போது இந்தியாவில் ஒரே ஏக போக டிவியாக இருந்த ZEE TV யில் ஒரு ஸ்லாட் கேட்டு மும்பை ZEE TV அலுவலகத்திற்கு சென்று, அதன் அதிபராக இருந்த இதே சுபாஷ் சந்திராவை பார்க்கப் போய் பல மணி நேரம் காத்திருந்து விட்டு அவரை பார்க்க முடியாமல் சென்னைக்கு திரும்பி, பின்னர் சுயமாகவே அவர் ஆரம்பித்ததுதான் சன் டிவி!
ஜாதி மதம் இனம் என்று எந்த பேதமும் அவர் நடத்தும் நிறுவனங்களில் இருந்ததில்லை.
வீண் பேச்சு, வெட்டி பந்தா எதுவும் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்தான் சன் குழுமத்தின் வேரும் வெற்றியுமான புகழ் என்று எங்களுக்கு அறிமுகமான கலாநிதி மாறன். அவர் எதை செய்தாலும் தன் ’பங்கி’ற்கு சரியாய்தான் செய்வார்.
நான் வியந்து பார்த்த தமிழ் மீடியா உலகின் ஒற்றை நட்சத்திரம் கலாநிதிமாறன், இந்த பங்கு பிரச்சனைகளின் கதையை தன் ஒரே கடிதத்திலேயே அவர் முடித்து விடுவார்.!
தேர்தல் வரப்போகிறது யாராவது தயாநிதியை பார்த்தால் ஒழுங்கா எலக்ஷன் வேலைகள பாக்க சொலுங்க? சென்னையில ரெண்டு மூணு தொகுதி பிச்சிக்கிட்டு போகப் போகுதாம்?
— தாமஸ் அருள் எழிலன் – மூத்த பத்திரிகையாளர்