மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோலாகல நிகழ்வு!
கோவிந்தா கோஷம் முழங்கிட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
தொடர்ந்து, மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளிதை தொடர்ந்து பக்தர்கள் புடைசூல கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட, வைகை கரை வந்தடைந்தார்.
அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ”கோவிந்தா” கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று இரவு முதலே தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு இருந்தனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியினர் சிறப்பாக செய்து இருந்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததுடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.