ஆன்மீகப் பயணம் : கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோவில்!
இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த சித்தேஸ்வரர் திருக்கோவில்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலையில் அமைந்திருக்கிறது சித்தேஸ்வரர் திருக்கோவில். இது சுமார் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் அருள்மிகு சித்தேஸ்வரர் ஆவார். இங்கு காந்த தீர்த்த குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தில் இருந்து எடுக்கபடும் நீரே இக்கோவிலின் தீர்த்தமாகும்.
இக்கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒரு சித்தர் கோவிலில் முதன் முதலாக கிரிவலம் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் மலை உச்சியில் லங்கி சித்தர் மற்றும் திருமூலர் சன்னதியும் உண்டு. அங்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லை, எனவே நடந்து தான் செல்ல முடியும். இதைத் தவிர்த்து கோவிலில் விநாயகர் மற்றும் மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. அவரை ஞானசற்குரு பாலமுருகன் என அழைப்பார்கள். நாரதர் சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.
மேலும் இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அங்கு தீரா வியாதிகள் குணமாகவும் முகத்தில் இருக்கும் பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி கிணற்றுக்குள் போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். திருக்கோவில் அமைந்திருக்கும் கஞ்சமலையில் மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால் இங்கு ஒருமுறை கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலின் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். பூ முடி கொடுத்தல், மொட்டை அடித்தல் என வேண்டுதல்களும் நிறைவேற்றப்படுகின்றன. கோயிலுக்குள் இருக்கும் காந்த தீர்த்த குளத்து நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இக்குளத்து நீரை தலையில் தெளித்துக் கொண்டாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.
அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து கஞ்சமலை சித்தேஸ்வரரை வணங்கி செல்கின்றனர். மேலும், பௌர்ணமி அன்று பக்தர்கள் மாலை ஐந்து மணியில் இருந்து கிரிவலம் வர துவங்குகின்றனர். சுமார் எட்டு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்ல சுற்றி வருவது வழக்கம். இரவு நேரத்தில் சுற்றுச்சூழல் மாசு இல்லாத இம்மலையை சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்றுப்பட்டு உடலின் பல நோய்கள் தீருவதாக நம்புகின்றனர்.
கஞ்சமலையில் உள்ள காலங்கி சித்தர் என்பவர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். இவர் திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர் 7 மடங்களை ஸ்தாபித்தவரும் ஆவார். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஸ்டம சித்திகளை அறிந்தவரும் ஆவார். இந்தப் புண்ணிய பூமியான கஞ்சமலையில் இன்றும் இரவு நேரங்களில் சித்தர்களின் நடமாட்டம் இருப்பதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். உங்களது குடும்பத்துடன் ஒருமுறையாவது கஞ்சமலையில் அமைந்திருக்கும் சித்தேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பு!
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.