கண்ணொளி தருவோம் அறக்கட்டளை தொடக்க விழா.
கடந்த 25.5.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அரக்கோணத்தில் போலீஸ் – பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த அறக்கட்டளையின் தலைவர் அரக்கோணம் டாக்டர். எஸ். என். ராஜேஷ் அவர்கள் எழுதிய தகப்பன்சாமி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் கண் ஒளி தருவோம் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் சிவகுமார் இ.கா.ப. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பங்கு பெற்ற காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
கண்ணொளி தருவோம் அறக்கட்டளையைத் துவங்கி வைத்து திட்டத்தின் நோக்கம் மற்றும் செயலாக்கம் பற்றி பேசிய டாக்டர் ஆர்.சிவகுமார் ஐ.பி.எஸ். இவ்வாறு பேசினார்;
“இயற்கையாக இறந்தவர்களின் கண்களை பெறுவதில் கடினங்கள் உள்ளன. கண் தானம் செய்ய உறுப்பினராக சேர்ந்து கொண்டவர்கள் இயற்கையாக இறக்கும்போது எங்கோ ஒரு மூலையில் இறக்கும் பொழுது 6 மணி முதல் 8 மணி நேரத்திற்குள் அவர்களின் உடலை மருத்துவமனைக்கு வர வைப்பதும்/ அந்த இடத்திற்கு மருத்துவர்களை வரவழைப்பதும் கடினமான காரியம்.
ஆனால் அதேசமயம் விபத்தில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்கள் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு வந்துவிடும்.
அந்த சமயத்தில் இறந்தவர்களின் உறவினர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து கண்களையோ, உறுப்புகளையோ தானமாக எடுத்துக் கொள்வது கொஞ்சம் எளிதான காரியம்தான்.
சாலை விபத்துகளில் அடிபட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் நிச்சயமாக ஆயுள் காப்பீடு செய்து இருப்பார்கள்.
எனவே காப்பீட்டுக்காக பிரேதப் பரிசோதனைக்கு இறந்தவர்களின் உடலை கொடுக்க அவர்கள் உறவினர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
ஏற்கனவே அடிபட்டு காயம்பட்ட அந்த உடலில் மீண்டும் கத்தியை வைத்து பிணப்பரிசோதனை செய்கிறோம்: கூடவே கொஞ்சம் கண்களையும் எடுத்துக்கொள்ள நிச்சயமாக உறவினர்கள் சம்மதிப்பார்கள்.
எனவே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்போது விபத்து ஏற்படுகிறது? அதில் யார் இறக்கிறார்கள். இறந்தவர்கள் உடல் எந்த அரசு மருத்துவமனைக்கு செல்கிறது என்ற விவரங்களை காவல்துறையிடம் சேகரிதக்க இயலும்.
உடனே ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் இருக்கும் நமது கண்ஒளி தருவோம் உறுப்பினர்கள் இந்தத் தகவலை வைத்து அந்த அரசு மருத்துவமனைக்குச் சென்று அரசு மருத்துவரிடம் கலந்து பேசி, காவல்துறை யிடம் விளக்கிச் சொல்லி, உறவினர்களைப் பார்த்து உதவச் சொல்லி அவர்களை இணங்க வைத்து, சம்மதிக்க வைத்து கண் தானம் செய்ய ஒத்துக் கொண்டால் இந்த திட்டம் மிக நன்றாக வெற்றியடையும்.
இறந்த பிறகும் இந்த உலகில் நாம் உயிர் வாழ உடல் உறுப்பு தானம் மிகச்சிறந்த வழியாகும்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறந்த உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
*இறுதியாய் செல்லும் முன்பே இருப்பதில் சிலதை கொடுத்துச் செல்வோம்; கடலிலே கலக்கு முன்பே காய்ந்த நிலங்களை கொஞ்சம் நனைத்துச் சொல்வோம்:
*என்பதே கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் தாரக மந்திரமாகும்.
— டாக்டர். ஆர்.சிவகுமார் IPS பேசினார்.