கூவத்துல பூங்கா, விவசாயிக்கு சாக்கடை ! மக்களுக்கு பயன்படாத பூங்கா ! 14.20 கோடி வீணா?
நாமக்கல் நகரத்தை சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் கடைகள் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, நெசவு, லாரி மற்றும் உதிரிபாகங்கள் கெமிக்கல் கம்பெனி, பெயிண்ட் கம்பெனி, மற்றும் பஸ் டயர், ரிபெல்ட் தூள் கிரஷர், டைல்ஸ், சாயப்பட்டறை, கோழிப்பண்ணை கழிவு, மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் என பல்வேறு கழிவுகளை பொது இடங்களில் கொட்டி அழகான நாமக்கல் நகரை நாசம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
குறிப்பாக, என்.கொசவம்பட்டி, வீசாணம் மற்றும் வேட்டாம்படி கிராமத்தில் உள்ள குளங்களில் நேரடியாக இந்த கழிவுகள் கொட்டப்படுவதாகவும்; இதனால் அப்பகுதியை சுற்றிலுமுள்ள விவசாய நிலம் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த 36 ஏக்கர் குளத்தில் இருந்து வெளியேறும் கழிவு வீசாணம், வேட்டாம்படி, சிதம்பரப்பட்டி, தாதம்பட்டி, கரூர் என பல குளம் ஏரி மற்றும் கிணறு என நேரடியாக கலக்கிறது. இதில் பல்லாயிர கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, பருத்தி, கடலை, மிளகாய், கிழங்கு, கரும்பு, பருப்பு, காய்கறிகள் என பல இலட்சம் விவசாயிகள் இந்த ஏரி குளத்தை நம்பியுள்ளனர். தற்போது இந்த இராசயண கழிவு நேரடியாக கலப்பதால் குடி தண்ணீரும் விவசாயமும் வேரோடு அழிந்து வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் ஆழ்துளை போட்டால் கூட நுரை கலந்த பெட்ரோல், டீசல் போன்ற இராயனம்தான் வருகிறது. மேலும், இந்த குளத்த்தை சுற்றியுள்ள மக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை. மேலும் தொற்று வியாதிகளும் பரவுகின்றன.
அதுமட்டுமின்றி, இந்த கழிவு பாலப்பட்டி, கணவாய்ப்பட்டி, திப்பிரமாதேவி, மேட்டுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், வாள்வேல்புத்தூர், எம்.களத்தூர், நாகையநல்லூர் என பல கிராமங்களை துவம்சம் செய்து இறுதியில் காவேரியில் கலக்கிறது இந்த நச்சுக்கழிவு.
இதுபோன்று கழிவுகளால் சீர்கேடு அடைந்த என்.கொசவம்பட்டியில் உள்ள 36 ஏக்கர் குப்பையை குளத்தை சுத்தம் செய்து ரூ 4 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு செலவில் பூங்கா அமைக்க, கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார், எம்.எல்.ஏ. இராமலிங்கம். பூங்கா கட்டி முடிக்கப்பட்டும் இன்று வரையில் திறக்கப்படாமல் இருக்கிறது. நாற்றம்பிடித்த குளத்தை சுற்றி கட்டியுள்ள பூங்காவிற்கு யார் வருவார்கள்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். பூங்கா அமைத்ததற்கு பதில், கழிவுநீர் கலக்காதபடி வேறு உருப்படியான திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அங்கே வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தண்ணீரை எடுத்து சென்று பரிசோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், கூறியவர் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவது குறித்து பொதுமக்கள் முறையிட்டதற்கு இந்த தண்ணீரை வேறு நாங்கள் எங்கே விடுவது என்று கேட்டதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுமக்களை சமாளிப்பதற்காக, தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்து செல்கிறார். பின்னர் கண்டுகொள்வதில்லை என்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எதிர்பார்க்கிறார்கள், பாதிக்கப்பட்ட மக்கள்.
— அருள்.