குடியைக்கெடுத்த குடிகார நண்பர்கள் ! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பனகமுட்லு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களின் திருமணம் காவேரிப்பட்டிணம் சேலம் சாலையில் உள்ள எஸ்.எம். கல்யானி திருமண மண்டபத்தில் கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் 26-ம் தேதி மாலை அந்த மண்டபத்தில திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். இரவு 9 மணியளவில் மாப்பிள்ளை அவர் நண்பர்களுக்கென்று அளித்த மது விருந்தை முடித்த கையோடு , போதை தலைக்கு ஏறிய நிலையில் சிலர் மண்டபத்திற்குள் புகுந்து Dj இசைக்கு ஏற்றவாறு வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டனர்.
ஒத்தாசைக்கு, ஊத்திக் கொடுத்த மாப்பிள்ளையையும் நடனமாட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட மாப்பிள்ளையும் தன் பங்குக்கு போதை நண்பர்களோடு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு முடித்தார் . அத்தோடு நிற்காத போதை நண்பர்கள் மணப்பெண்ணையும் தங்களோடு சேர்ந்து குத்தாட்டம் போடுமாறு கையைப்பிடித்து இழுக்க கோபத்தின் உச்சிக்கே சென்ற மணப்பெண். நடனமாடுவதில் எனக்கு விருப்பமில்லை ஆடவும் தெரியாது என கூறி மறுத்திருக்கிறார்.
வேடிக்கை பார்த்த மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே, இவரும் குடிகாராகதான் இருப்பார். இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்னவாகும் ? எனவே, இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என ஆவேசத்துடன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி மாப்பிள்ளை முகத்தில் வீசிவிட்டு, தனது உறவினர்களோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
திருமண உற்சாகத்துடன் இருந்த மாப்பிள்ளை செயவதிறியாமல், துக்கத்தோடு மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவற்றை இரவோடு இரவாக கழட்டிக் கொண்டு மணமகனும் அவர் வீட்டிற்கு நடையைக் கட்டினார்.
இதனிடையே காலை திருமணத்திற்கு வந்த பலரும் மண்டபம் பூட்டப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தாரிடம் கேட்டறிந்து ” கூடா நட்பு கேடாய் முடியும்” என கூறியவாரே நடையைக் கட்டினர் .
— மணிகண்டன்