மறைந்தார் கலைமாமணி “விகடம்“ குன்னியூர் ஆர்.கல்யாண சுந்தரம் !
83 வயது வரையிலும் தமிழகத்தில் விகடகவி கலையை நிகழ்த்திக் காட்டிய கலைஞர், குன்னியூர் ஆர்.கல்யாண சுந்தரம் கடந்த ஜூலை-22 அன்று உடல்நலக்குறைவால் மறைந்தார்.
விஜயநகர பேரரசில் விகடகவியாக இருந்த தெனாலிராமனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வார்த்தை ஜாலமும் புத்திக்கூர்மையும் ஒரே நேரத்தில் சிரிக்கவும் அதன் வழியே சிந்திக்கவும் வைப்பதில் கில்லாடி தெனாலிராமன்.
அன்று, அரசனுக்காக தெனாலிராமன் நிகழ்த்தியதை, தமிழகத்தின் வீதி தோறும் நிகழ்த்திக் காட்டியவர் பிரம்மஸ்ரீ ராமசாமி சாஸ்திரி. அவரை மானசீக குருவாக ஏற்று, விகடகலையை கற்று தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் அரங்கேற்றங்களை கண்டவர் கும்பகோனம் – குன்னியூர் ஆர்.கல்யாண சுந்தரம்.
தனது தனித்துவமான கலை திறனுக்காக, கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. மற்ற கலைகளை போல் அல்லாமல், தனித்திறமைகளும் சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களோடு பிணைத்து சொல்லும் கலை என்பதால் என்னவோ, கலையை கற்றுக்கொள்ள யாரும் ஆர்வம் காட்டாது போனார்கள். தமிழகத்தின் அழியும் கலைகளுள் ஒன்றாகிப்போனது, விகடக்கலை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு கலை இருக்கிறது என்பதே பெரும்பான்மையானோருக்கு இன்றுவரையில் தெரிந்திராத ஒன்று.

அருள்மிகு பழனிமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவில் இந்த விகடக் கலைஞரின் நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும். அது ஒன்றுதான், அவரது ஒரே ஆறுதல்.
ஒரு காலத்தில், கோவில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளில் இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் காலப்போக்கில் அருகிப்போனது. ஆனாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை அவர் பயன்படுத்த தவறியதில்லை. 83 வயதில் சாகும் வரையிலும்கூட, கலைக்காக இயங்கி வந்த கலைஞர் அவர்.
அழியும் கலையாகிப்போன விகடகவி கலைக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியாக, தஞ்சாவூரைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் அவரை அழைத்துக் கொண்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக சென்று திரும்பும் வழியில்தான் இரயில் பயணித்திலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது.
தான் உயிரினும் மேலாக நேசித்த விகடகலையும் தன்னோடு சேர்ந்தே அழிந்துவிடக்கூடாது என்பதற்குத்தானே 83 வயதிலும் தலைநகர் டெல்லிக்குப் பயணமானார் குன்னியூர் ஆர்.கல்யாணசுந்தரம்.
அரசு வழங்கிய கலைமாமணி பட்டம் அவரது வீட்டு மாடத்தை அலங்கரிக்கிறது. அன்புத் தோழனை இழந்த துக்கத்தில் சோர்ந்து கிடக்கிறார் மனைவி ஜெயா. வாரிசுகள் இல்லாத நிலையிலும் விகடகலையை தனது வாரிசாகவே வரித்துக்கொண்ட கலைஞனின் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்க முடியும் ?
— தஞ்சை க.நடராஜன்